Saturday, May 4, 2019

நிதர்சனம்

அகர்சந்த் ஜுவல்லரியில் மனைவியுடன் அமர்திருந்தார் ராஜன்.  மனைவி லலிதா மிக மும்முரமாக கடை முதலாளியுடன் பேசிக்கொண்டிருந்தாள்.  சிறிய கடைதான்.  ஆனாலும் அவர்கள் ஊரில் வெகுநாட்களாக இருக்கும் கடை.  லலிதாவும் ஆரம்ப நாட்களிலிருந்தே இந்தக்கடையின் வாடிக்கையாளர்.  ஆதலால் இவர்களை எப்பொழுதும் மற்றவர்களைவிட சற்றே அதிக மரியாதையுடன் நடத்துவார்.

அன்று லலிதா ஒரு வைரத் தோடு வாங்கவேண்டும் என்ற எண்ணத்துடன் வந்திருந்தாள்.  பழைய மாடல், புதிய மாடல் எல்லாம் அலசிப்பார்த்தும் ஒன்றும் அவளுக்குப் பிடிக்கவில்லை.  சிறிய கடையாதலால் கடையிலும் மிகக் குறைவான அளவே வைர நகைகள் வைக்கப்பட்டிருந்தன. வைரத்தில் ஒரே ஒரு தோடு மாத்திரம் இருந்தது.  அது அவளுக்குப் பிடித்திருந்தாலும் ஒப்பிட்டுப் பார்க்க வேறு மாடல்கள் இல்லாததால் அவளால் அதை வாங்க முழுமனதோடு முடிவு செய்ய முடியவில்லை.

முதலாளி சனத் மிகவும் நல்லவன்.  அம்மா, உங்கள் விருப்பம் எனக்குப் புரிகிறது.  கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.  இரண்டே நாட்களில் டவுனிலிருந்து நீங்கள் கேட்கும் மாதிரி மாடல்கள் நிறைய வரவழைக்கிறேன்.  அவற்றில் எது வேண்டுமோ பார்த்து முடிவு செய்தால் அதையேவோ அல்லது அதே மாதிரி புதிதாக செய்தோ கொடுத்துவிடுகிறேன் என்றார்.

வாங்க நினைத்தது கிடைக்கவில்லையே என்ற வருத்தத்துடன் வெளியே வந்தாள் லலிதா.  அவள் முகம் சற்று வாடியிருந்ததை கவனித்த ராஜன், கவலைப்படாதே லலிதா.  இந்த ஊரில் இந்தச் சிறிய கடையில் இவ்வளவுதான் இருக்கும்.  நாளை நான் உன்னை டவுனுக்கு கூட்டிச் செல்கிறேன்.  அங்கு நிறைய பெரிய கடைகள் இருக்கும்.  எல்லாவற்றையும் பார்த்து உனக்குப் பிடித்த மாதிரி வாங்கிக் கொள்ளலாம் என்றார்.

சொன்ன வார்த்தை தவறாமல் அடுத்த நாள் டவுனுக்கும் அழைத்துச் சென்றார்.  முதலில் வைர வியாபாரம் மட்டுமே செய்யும் பிரபல கடைகள் இரண்டையும் பார்த்தனர்.  மாடல்கள் அழகாக இருந்தாலும் விலை மிகவும் அதிகமாக இருப்பதாக் பட்டது.  மேலும், ஏதாவது அவசரம் என்றால் திரும்ப எடுத்துக் கொள்வார்களா என்று விசாரித்ததில் இரண்டு கடையிலும் சரியான பதில் கிடைக்கவில்லை.  எனவே மற்ற நகைக் கடைகளுக்கும் செல்வது என்று முடிவு செய்தனர். 

ஒரு நல்ல ஓட்டலில் சாப்பிட்டபின் சிறிது ஓய்வெடுத்துக்கொண்டு பின்னர் ராஜனும் லலிதாவும் மீண்டும் மூன்று நகைக்கடைகளில் பார்வையிட்டனர்.  அங்கும் இதே கதைதான்.  ஒன்று, வாங்கும்போது விலை சற்று அதிகமாக இருந்தாலும், விற்க வேண்டியிருந்தால் அதே கடையில் திருப்பிக்கொடுத்தால் ஓரளவு விலை கிடைக்கும்.  அல்லது, வாங்கும்போது விலையில் அட்ஜஸ்ட் செய்து குறைவாகக் கொடுத்தால் திருப்பி எடுத்துக்கொள்வது பற்றி சரியாகப் பேச மாட்டேன் என்கிறார்கள்.  மீண்டும் மன வருத்தத்துடன் லலிதா வெளியே வருவதை கவனித்தார் ராஜன்.

என்ன லலிதா, டவுனுக்கு வந்தாலும் சரியாகக் கிடைக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறதா?  கவவைப்படாதே.  இங்கே புதிதாகத் திறந்திருக்கும் கதிரவா ஸ்டோர் பற்றி எல்லோரும் மிக உயர்வாகப் பேசுகிறார்கள்.  குண்டூசியிலிருந்து குதிரை வண்டி வரை எல்லாமே நல்ல தரத்திலும் விலை குறைவாகவும் கிடைக்கிறதாம்.  அங்கேயே ஜவுளி, பலசரக்கு, பலகாரம், காய்கறி எல்லாம் வேறு கிடைக்கிறதாம்.  ஒரே கடையிலேயே மொத்த தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளலாம் போல் தெரிகிறது.   கடைசி முயற்சியாக அங்கு ஒரு நடை பார்த்துவிட்டு வரலாம் வா.  அங்கும் கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கிறது சனத்தின் அகர்சந்த கடை.  அடுத்த வாரம் எப்படியும் கொண்டுவந்துவிடுவான், அவனிடத்திலேயே வாங்கிவிடலாம் என்றார்.

டவுன் கடைகளில் பல்வேறு மாடல்கள் பல அளவுகளிலும் பல டிசைன்களிலும் பார்த்தபின் மீண்டும் அகர்சந்த் கடையில் பார்த்த மாடல்களை நினைவுபடுத்திப் பார்க்கும்போது நிச்சயம் இந்தக் கடைகளுக்கு அது ஈடாகாது என்பது புரிந்தது அவளுக்கு.  அதே சமயத்தில் இத்தனை வருடங்களாக வாடிக்கையாக வாங்கும் கடையைவிட்டு வேறு இடத்தில் வாங்கத்தான் வேண்டுமா என்ற சலனமும் மனதில் இருந்தது.  ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்த லலிதாவை ராஜன் சமாதானப்படுத்தினார்.

நான் ஒன்றும் இங்கு வாங்கித்தான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை லலிதா.  நான் சொன்ன அந்த கதிரவா ஸ்டோர் இங்கேயே அடுத்த தெருவில்தான் இருக்கிறது.  இத்தனை கடைகளைப் பார்த்த நாம் அதை மாத்திரம் ஏன் விடுவானேன் என்றுதான் சொன்னேன்.  ஒரு வேளை அங்கே உனக்குப் பிடித்தாற்போல் ஒரு தோடு குறைந்த விலையிலும் கிடைக்கலாம் அல்லவா? என்று அவளை மெதுவாகத் தூண்டினார்.  அரை மனதுடன் ஒப்புக்கொண்டாள் லலிதா.

அவர்களுடைய எதிர்பார்ப்பைவிட கதிரவா கடை பல மடங்கு பிரம்மாண்டமாக இருந்தது.  ஒரு கடையில் இத்தனை பொருட்களா என்று வியந்தனர் ராஜனும் லலிதாவும்.  நகை செக்ஷனுக்கே ஒரு தளம் முழுதாக ஒதுக்கியிருந்தனர்.   ஒரே இடத்தில் இத்தனை நகைகளை லலிதா தன் வாழ்நாளில் பார்த்ததில்லை.   வைர நகைப் பகுதிக்கு வந்தால், அங்கு அடுக்கியிருக்கும் நகைகள் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.  நூறு தோடுகளுக்கு மேல் ஒப்பிட்டுப் பார்த்தபின் லலிதா தேர்ந்தெடுத்த தோடு கிட்டத்தட்ட அவளது ஊரில் சனத் கடையில் பார்த்தது போன்றே தோன்றியது. 

விலை விசாரித்ததில் அகர்சந்த் கடையைவிட ஐந்தாயிரம் ரூபாய் குறைவாக இருந்தது.  லலிதாவால் நம்ப முடியவில்லை.  நிஜமாகவே இவர்கள் விலை மிகக் குறைவாக விற்கிறார்களா அல்லது சிறிய ஊர் என்பதால் யாரும் கேட்கமாட்டார்கள் என்று சனத் சற்று அதிகம் விலை வைத்து விற்கிறானா என்று குழம்பினாள்.  இதே தோடு அங்கும் கிடைக்கும்போது ஆண்டாண்டுகால வாடிக்கையைவிட்டு இங்கே வாங்குவது முறைதானா என்ற சந்தேகம் எழுந்தது.  மேலும் சனத்திடம் வாங்கினால் முழு விலையையும் இப்பொழுதே கொடுக்க வேண்டியதில்லை.  கொஞ்சம் கொஞ்சமாகக்கூட பணம் கொடுத்துக்கொள்ளலாம் என்ற செளகரியமும் இருந்தது.  ஆனாலும் ஐயாயிரம் ரூபாய் குறைவு என்றபோது இதை விட்டுவிடவும் மனதில்லை அவளுக்கு.   என்ன முடிவு எடுப்பதென்று தெரியாமல் தத்தளித்தாள் லலிதா.  கடைசியில் தன் எண்ணக்கிடக்கையெல்லாம் ராஜனிடம் ஒப்புவித்துவிட்டு முடிவை அவரிடமே விட்டுவிட்டாள்.

நீ சொல்வதெல்லாம் சரிதான் லலிதா.  ஆனால் யோசித்துப்பார்.  இவ்வளவு நல்ல தரமுள்ள நகை இவ்வளவு குறைவான விலையில் எனக்குத் தெரிந்தவரை வேறு எங்கும் கிடைக்காது.  எனவே இங்கே வாங்குவதுதான் புத்திசாலித்தனம் என்று தன் முடிவைச் சொன்னார் ராஜன்.

அப்போ சனத் என்ன பண்ணுவான் பாவம், நம்மைப்போல எல்லோரும் இப்படி டவுனுக்கு வந்து வாங்கினால் அவன் வியாபாரம் படுத்துவிடாதா? அவன் பாவமில்லையா? என்றாள் லலிதா.

அதற்கென்ன செய்வது?  இது காலத்தின் கட்டாயம்.  நீ இதற்கெல்லாம் கவலைப்படாதே.  சலுகை மற்றும் சமயம் கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்ளத் தவறினால் நாம் தான் ஏமாந்தவர்கள் ஆவோம்.  நாம் ஒன்றும் சனத்துக்கு துரோகம் செய்யவில்லையே?  அவனை ஒன்றும் ஏமாற்றவில்லையே?  அவன் மட்டும் இந்தக் கடை முதலாளி போல் முயற்சித்திருந்தால் அவனும் இன்று பெரிய கடை வைத்திருக்கலாம் அல்லவா? வளர வழி பார்க்காமல் அங்கேயே தேங்கியிருந்தது அவன் தவறு.   அதற்காக அவனுக்குப் பாவம் பார்ப்பது சரியல்ல.  அவன் நல்லவன் தான்.  ஆனால் நாளை நமக்கு ஏதேனும் கஷ்டம் நேர்ந்தால் அவனா வந்து உதவப்போகிறான்?  ஒருவேளை நீ சொல்வதுபோல் நிலைமை மாறினால் நாளைக்கே சனத் மாத்திரமல்ல, மற்ற சிறிய வியாபாரிகளும் தத்தம் தொழிலை விட்டுவிட்டு மளிகையோ காய்கறி வியாபாரமோ ஆரம்பிக்கக்கூடும்.  அப்போது அவனிடத்திலேயே வாங்கிக்கொள்ளலாம் என்று லலிதாவை சாந்தப்படுத்தினார் ராஜன்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home