Saturday, May 25, 2019

அரள்

நாய்கள் விடாமல் குரைத்துக்கொண்டிருந்தன.  அவளுக்கு பயமாக இருந்தது.  கணவன் வேறு ஊரில் இல்லை.  வீட்டின் முன் கதவு, வாசல்புற கிரில் கேட் மற்றும் வெளிப்புற இரும்பு கேட் ஆகியவற்றை தானே ஒன்றுக்கு இரண்டு முறை சரியாகப் பார்த்து பூட்டிவிட்டுத்தான் உள்ளே வந்தாள் என்பது ஞாபகம் இருந்தும் இத்தனை நாய்களும் ஒன்றாகக் குரைக்கும்போது தைரியம் சற்று குறையத்தான் செய்தது.

தான் தனியாக இருக்கிறோம் என்பது தெரிந்து திருடர்கள் நுழையப்பார்க்கிறார்களா என்று சந்தேகமாக இருந்தது.  இதற்குத்தான் தனி வீடு வேண்டாம், மக்கள் நடமாட்டம் நிறைய உள்ள பகுதியில் ஒரு நல்ல ஃப்ளாட்டாகப் பார்த்து குடியேறலாம் என்றால் சொந்த வீட்டை, அதுவும் பரம்பரையாக இருந்த வீட்டை விட்டுவிட்டு யாராவது ஃப்ளாட்டுக்குப் போவார்களா என்று கேலி செய்வான் அவள் கணவன்.

அவள் பயத்தைப் பற்றி அவனுக்கென்ன தெரியும்?  வாரத்தில் பாதி நாட்கள் வேலை காரணமாக ஊருக்குப் போய்விட்டு மீதி நாட்களில் அலுப்பு தீர தூங்குவதே அவன் வேலையாக இருந்தது.  அப்படி நிம்மதியாகத் தூங்குவதற்கு இந்த மாதிரி தனி வீடுதான் வசதியாகவும் இருந்தது.  நகர்ப்புற இரைச்சலில் மற்றவர்களின் கூப்பாட்டுக்கு இடையில் காற்றே இல்லாமல் புறாக்கூண்டு போன்ற ஃப்ளாட்டில் இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.  பெரிய ஃப்ளாட்டாக இருந்தாலும் கூண்டு கூண்டுதானே என்பது அவன் வாதம்.  அவளால் எதிர்த்துப்பேச முடியவில்லை.

அன்றும் அவன் ஊரில் இல்லை.  வருவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகும்.  நாய்களின் இடைவிடாத குரைப்பு அவளுக்கு எரிச்சல் மூட்டியது.  சனியன்கள்.  இப்படி பாதி ராத்திரியில் குரைக்கத் தொடங்கினால் விடியற்காலை வரை விடாமல் சத்தம் போட்டுக்கொண்டே இருக்கும்.  இந்த ராத்திரியில் எழுந்து போய் கதவைத் திறந்து பார்ப்பதற்கும் பயமாக இருந்தது. இவைகளின் குரைத்தலில் தூக்கமும் கலைந்துவிடும். மறுநாள் முழுவதும் மந்தமாக இருக்கும். 

நாய்களை அடக்கலாம் என்று கொஞ்சம் தைரியம் வரவழைத்துக்கொண்டு சன்னலை மட்டும் திறந்து சு-சூ, போ என்று விரட்டினாள்.  ஒரு வினாடி அவளைப்பார்த்துவிட்டு பிறகு அவள் விரட்டுவதைப் பற்றி கவலைப்படாமல் எங்கோ பார்த்தபடி குரைப்பதை மீண்டும் தொடங்கின அந்த நாய்கள்.  அவைகள் குரைப்பதைக் கண்டு மற்ற நாய்களும் பின்பாட்டு போல தத்தம் வீதிகளில் ஓலமிட்டன.  சன்னல் வழியாக யாரைக் கண்டு குரைக்கின்றன, ஏதாவது தெரிகிறதா என்று சுற்றுமுற்றும் நோட்டம் விட்டால் கண்ணுக்கெட்டியவரை ஒரு சலனமும் இல்லை.  ஏன்தான் இப்படி பிராணனை வாங்குகின்றதோ என்று நாய்களை நொந்தபடியே சன்னலை மூடிவிட்டு படுத்துக்கொண்டாள்.

காலையில் எழுந்தவுடன் வெளிச்சம் தந்த தைரியத்தில் கதவைத் திறந்துகொண்டு வீட்டைச் சுற்றிலும் நோட்டம் விட்டாள்.  எங்கும் எந்த மாற்றமும் இல்லை.  எல்லாம் அதனதன் இடத்தில் அப்படியே இருந்தன.  பின்பக்கச் சுவற்றின் அருகில் மட்டும் இரவு முழுவதும் கத்திக்கொண்டிருந்த நாய்கள் இரண்டும் இவள் வந்ததைக்கூட உணராமல் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தன.  தன் தூக்கத்தைக் கலைத்த நாய்களின் மீது எரிச்சலுடன் ஒரு சொம்பு தண்ணீரைக் கொட்டினாள்.  இரண்டும் மிரண்டு அலறியடித்துக்கொண்டு ஓடின.  திரும்பவும் ராத்திரி கத்தினீங்கனா குச்சியாலேயே பொளந்துடுவேன்… ஓடுங்க என்று ஆக்ரோஷமாக இன்னும் கொஞ்சம் தண்ணீரை அவற்றின் மேல் வீசியடித்தாள் அவள்.

மறுநாள் அவள் நினைத்தபடியே வேலை ஓடவில்லை.  சரியாகத் தூங்காததால் ஏற்பட்ட அலுப்பு அவளை எதிலும் கவனம் செலுத்த முடியாமல் தடுத்தது.   பிற்பகலிலாவது சிறிது நேரம் தூங்கினால்தான் சுறுசுறுப்பு வரும் என்ற எண்ணி சீக்கிரமாகவே சமையலை முடித்துக்கொண்டு சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் தூங்கினாள்.  இளைப்பாறி மாலை எழுந்தபோது உடலும் மனமும் லேசானதாக உணர்ந்தாள்.  புத்துணர்ச்சியுடன் முகம் கழுவி ஆடை மாற்றிக்கொண்டு கோவிலுக்கும் அருகிலுள்ள மார்க்கெட்டுக்கும் நடந்து சென்று வந்தாள்.   சிறிது நேரம் டிவி பார்த்துவிட்டு கொஞ்சமாக உணவும் முடித்துக்கொண்டு நீண்ட நாட்களாக படிக்கவேண்டும் என்று நினைத்திருந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தாள்.

அது ஒரு மர்ம நாவல்.  திடுக்கிடும் திருப்பங்களுடன் கூடிய கதை.  மிக விறுவிறுப்பான நடை வேறு.  நேரம் போனதே தெரியாமல் கதையிலேயே மூழ்கிவிட்ட அவளுக்கு அவள் கணவன் போன் செய்தபோதுதான் நிகழ்கால நினைவு வந்தது.   நீண்ட நேரம் கணவனுடன் பேசி முடித்த பின் மீதமிருந்த வேலைகளை ஒவ்வொன்றாக முடித்தபோது கடிகாரம் இரவு பதினொன்றைத் தொட்டிருப்பதை உணர்ந்தாள்.   மீதி கதையை நாளை படித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து புத்தகத்தை மூடிவைத்துவிட்டுப் படுக்க ஆயத்தமானாள்.

வழக்கம்போல் வெளி கேட், பின் வாசல் கிரில் கதவு, பின் வாசற்கதவு ஆகியவற்றைப் பூட்டி பின்னர் மீண்டும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு உள்ளே படுக்கை அறைக்கு வந்து அறைக்கதவையும் மூடி தாழ்ப்பாளிட்டாள்.  நைட்டிக்கு மாறினாள்.   சுவாமி படத்தை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தாள்.

பிற்பகல் தூங்கியதாலோ என்னவோ தெரியவில்லை, சீக்கிரம் தூக்கம் பிடிக்கவில்லை.  எண்ணங்கள் எங்கெங்கோ அலைபாய்ந்தன.   படித்துக்கொண்டிருந்த கதையின் ஞாபகம் நடுநடுவே வந்து அவள் கவனத்தை மேலும் சிதறடித்தது.  திகில் கதையாதலால் இரவின் இருட்டில் கதையின் சம்பவங்கள் அவளுக்கு சற்றே அச்சத்தை ஏற்படுத்தின.  கடிகாரத்தைப் பார்த்தாள்.  மணி ஒன்றைத் தாண்டியிருந்தது.  மனதை திசை திருப்ப வேண்டுமென்றே எண்ணங்களை மாற்ற முயற்சித்தாள்.  காலையில் நாய்களை விரட்டிய ஞாபகம் வந்தது.

அப்பொழுதுதான் சட்டென்று ஒரு விஷயம் அவளுக்குப் புலப்பட்டது.  இன்று ஏன் எந்த நாயும் குரைக்கவில்லை?  ஆச்சரியமாகவும் அதே சமயம் அச்சமாகவும் இருந்தது அவளுக்கு.  எழுந்து சென்று சன்னலை மிகக்குறைவாகத் திறந்து பார்த்தாள்.  வழக்கமாக சுவற்றின் மேல் அமர்ந்திருக்கும் நாய்கள் இரண்டையுமே காணவில்லை. 

காலையில் தண்ணீர் ஊற்றியதால் பயந்துகொண்டு ஓடிவிட்டனவா?  அப்படியெல்லாம் பயப்படும் நாய்கள் இல்லையே அவைகள்?  ஒரு வேளை திருடர்கள் விஷ உணவு ஏதாவது வைத்து மயக்கடையச் செய்திருப்பார்களா?  தினந்தோறும் இடைவிடாமல் குரைக்கும் நாய்கள் இன்று ஏன் ஒரு சத்தமும் செய்யாமல் மெளனமாக இருக்கின்றன?  அவைகளின் மெளனம் அவள் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

தூக்கம் வராமல் புரண்டாள்.   அரைமணிக்கொருதரம் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.  மணி மூன்றரையைத் தாண்டியும் நாய்களும் குரைக்கவில்லை, தூக்கமும் வரவில்லை.   நாய்களின் குரைப்பு இல்லாமல் நிம்மதியாகத் தூங்கலாம் என்று பார்த்தால், அவைகள் குரைக்காமல் இருந்தாலும் தூக்கம் கெடுகிறதே என்று கவலைப்பட்டாள்.  நிம்மதியில்லாமல் தவிக்கும் இதைத்தான் நாய்ப்பிழைப்பு என்கிறார்களோ என்று ஆராய்ச்சியில் மூழ்கினாள்.

எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.   யாரோ கூப்பிடுவதுபோல் தோன்றவே கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்து பார்த்தால் மணி ஆறரை ஆகியிருந்தது.  கேட்டில் கட்டியிருக்கும் பையில் பால் பாக்கெட்டைப் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறான் பால்காரன்.  அவன்தான் குரல் கொடுத்திருக்கவேண்டும்.   பாலை எடுத்துக்கொண்டு கேட்டின் பூட்டைத் திறந்துவிட்டு வீட்டின் உள்ளே சென்றாள்.  பின்பக்கக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள்.  அவளைப் பார்த்ததும் அங்கே தூங்கிக்கொண்டிருந்த நாய்கள் அவள் தண்ணீர் ஊற்றாமலேயே எழுந்து ஓடின.

பின் வீட்டுக்கார அம்மாள் பேச்சுக் கொடுத்தாள்.  விஷயம் தெரியுமா?  நம்ம ரெண்டாவது வீதியிலே வெளியூர் போயிருக்கிறவங்க ஃப்ளாட்டுல நேத்து ராத்திரி திருடங்க புகுந்து பீரோவெல்லாம் உடைச்சிருக்காங்களாம்…இத்தனைக்கும் ஆறு குடும்பம் அந்த ஃப்ளாட்டுல இருக்கு… யாருக்கும் ஒண்ணும் தெரியல… காலைல பால்காரன் கதவு தெறந்திருக்கறதைப் பார்த்துட்டு ஊருக்குப் போனவங்க வந்துட்டாங்களான்னு விசாரிக்கப்போய் விவரம் தெரிஞ்சிருக்கு…. என்று தான் கேள்விப்பட்டதையும் படாததையும் சேர்த்து விவரித்துக் கொண்டிருந்தாள்.

தனி வீடு நல்லதா?   ஃப்ளாட்டில் வசிப்பது நல்லதா?  நாய்கள் குரைத்தால் நல்லதா? குரைக்காமல் இருந்தால் நல்லதா?அவளுக்கு அயர்ச்சியாக இருந்தது.  

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home