Thursday, August 8, 2019

வெந்நீர்

சங்கரன் ஒரு வெந்நீர் பைத்தியம்.  சிறு வயது முதலே எப்படியோ பழக்கமாக்கிக் கொண்டிருந்தான். காலை எழுந்தவுடனேயே வெறும் வயிற்றில் முதலில் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் வெந்நீர் குடித்தாகவேண்டும்.  அப்போதுதான் அவனது சிஸ்டம் சரியாக இயங்கும்.  மற்றபடி ஒரு பிரச்சினையும் இல்லை.  காபி கிடைத்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, டிபன் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி எப்படியோ நாளை ஓட்டிவிடுவான்.  அதே மாதிரி சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் வெந்நீர் வேண்டும். 

குளிப்பதற்கும் கூட.  அதற்கு மாத்திரம் சற்றே சூடாக கிட்டத்தட்ட கொதிக்கும் அளவிற்கு இருக்கவேண்டும்.  குளிர்காலம் என்றில்லை.  வெய்யில் காலத்தில்கூட குளிப்பதற்கு சுடுநீர்தான் வேண்டும்.  கீஸர் ரிப்பேரானால் அவன்தான் மிகவும் கவலைப்படுவான்.  உடனடியாக எலக்ட்ரீஷியனைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக்கொண்டு வந்து அதை சரிபார்க்கச் சொல்லுவான்.  உடனே முடியாது, ஒரு வாரம் போல் ஆகும் என்று சொன்னால் காத்திராமல் புதிய கீஸரையேகூட ஓரிருமுறை வாங்கியிருக்கிறான்.

அவனது வேலை பிரயாண வேலை.  வாராவாரம் குறைந்தது மூன்று நாட்களாவது வெளியூர் செல்ல வேண்டியிருக்கும்.  நிறைய ஊர்களில் காலையில் சுடுநீர் கிடைக்காமல் பச்சைத்தண்ணீரில் குளித்து அதனால் உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது அவனுக்கு.  அதனாலேயே அவனுடைய பிரயாணப் பையில் எப்போதும் ஒரு சிறிய இம்மர்ஷன் ஹீட்டர் வைத்திருப்பான்.  அது அவ்வப்போது ரிப்பேராகும்போது தூக்கிப்போட்டுவிட்டு வேறென்று வாங்கிவிடுவான்.  அவன் பிரயாணிக்கும் எல்லா ஊர்களிலும் எலக்டிரிக்கல் ஷாப் எங்கே இருக்கும் என்பது அவனுக்கு அத்துப்படி.

இப்படித்தான் ஒரு வாரம் எங்கோ வடஇந்தியாவில் கோடையின் கொதிக்கும் வெய்யிலில் சுற்றிவிட்டு மதியம் தகதகக்கும் பிற்பகலில் வீட்டிற்கு வந்து இறங்கியவுடன் குளிக்க வெந்நீர் கேட்டிருக்கிறான்.  அப்போது பார்த்து மின்வெட்டு.  சமையல்வாயுவும் அன்று காலைதான் தீர்ந்துவிட்டிருந்தது.  மாலைதான் சப்ளை வரும் என்று கேஸ்காரன் கூறியிருந்தான்.  சுடுநீர் கிடைக்காத ஏமாற்றத்தில் மனைவியை வாய்க்கு வந்தபடி திட்டித்தீர்த்தான்.  அவனது மகனும் மகளும் அப்பாவுக்கு இப்படிக்கூட ஒரு மனிதனுக்கு கோபம் வருமா என்று தோன்றும் அளவுக்கு  அன்றைக்கு முழுவதும் கோபம் கொண்டிருந்தான்.

ஒரு மாதிரியாக வெய்யிலின் தாக்கத்தால் குழாய்த் தண்ணீரே கொதிக்கக் கொதிக்க வந்ததனால் சற்று சமாதானமடைந்தான் சங்கரன்.  அன்று மாலை குடும்பத்துடன் வெளியே சென்று நல்ல ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்தார்கள்.  வீட்டிற்கு வந்து அனைவருடன் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கும்போது காலையில் தான் கோபப்பட்டதற்கு வருத்தமும் தெரிவித்தான் சங்கரன்.  “அது என்னமோ தெரியலை.  வெந்நீர் என் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது.  டேய் நடேசா (அவனுடைய மகன் பெயர்), நான் இப்பவே சொல்லிட்டேன்.  நான் செத்தா கூட என்னைக் குளிப்பாட்டும்போது கொதிக்கற வெந்நீர்தான் கொட்டணும்.  அப்போதான் என் ஆத்மா சாந்தியாகும்.  செய்வியா?” என்றான்.

அவனுடைய மனைவி குறுக்கிட்டாள்.  “சீ! நிறுத்துங்க.  நல்ல நாளும் அதுவுமா என்ன பேசறது, அதுவும் குழந்தைங்ககிட்ட எப்படிப் பேசறதுங்க விவஸ்தையே கிடையாதா உங்களுக்கு?” என்று சற்று உரக்கவே திட்டினாள்.  குழந்தைகள் இருவரும் அதிர்ந்து மொனமானார்கள்.

விதி அவர்கள் வாழ்வில் விளையாடியது.  அடுத்த வாரம் சங்கரன் ரூர்கேலா சென்றிருக்கும்போது அவன் சென்ற வேன் மோசமான விபத்துக்குள்ளாகி அவனையும் சேர்த்து ஏழு பேர் பலியானார்கள்.  உருக்குலைந்த வண்டியிலிருந்து உடல்களை மீட்கவே ஆட்கள் போராடவேண்டியிருந்தது.  அவனுடைய சட்டைப்பையில் இருந்த அடையாள அட்டை மூலமாகத்தான் அவனை அடையாளம் காணமுடியமளவிற்கு அவன் உடல் சிதைந்திருந்தது.  மீண்டும் திறந்து பார்க்கக்கூட முடியாதபடி அவனை மோட்டாவான வெள்ளைத் துணியில் கட்டி அனுப்பினார்கள்.  அவன் வேலை செய்யும் நிறுவனத்தின் அதிகாரிகளும் அவனது நெருங்கிய நண்பர்களும் சென்று அவனது உடலை தனி வண்டியில் ஏற்றிக்கொண்டு திரும்பினார்கள்.
அவன் மனைவி இடிந்துபோயிருந்தாள்.   அவளது அண்ணன் சபேசன்தான் கூட இருந்து இறுதிச் சடங்குகளை நடத்திக்கொண்டிருந்தான்.  பன்னிரண்டு வயதேயான நடேசன் தந்தையின் இழப்பை உணர்ந்திருந்தாலும் அதன் தாக்கங்களை அறியமுடியாதவனாக மாமா சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தான்.

துணியால் கட்டப்பட்ட சங்கரனின் சடலம் வீட்டின் வெளியே வைக்கப்பட்டதும் சாஸ்திரிகள் சபேசனிடம் "இப்படி கட்டுப்போட்டிருந்தா குளிப்பாட்ட முடியாதேண்ணா… கர்த்தாவை ஒரு மூணு உத்தரிணி கங்கா ஜலத்தைமாத்தரம் ப்ரோக்ஷணம் பண்ணச் சொல்லுங்கோ" என்றார்.

சபேசன் நடேசனைக் கூப்பிட்டு, “அப்பா குழந்தே… நியாயப்படி அப்பாவை குளிப்பாட்டித்தான் தகனம் பண்ண எடுத்துண்டு போகனும்.  இப்போ அது முடியாததாலே இந்தா இந்த சொம்பிலேந்து மூணு ஸ்பூன் தண்ணி மாத்திரம் எடுத்து அப்பா மேல தெளி" என்றான்.

நடேசம் கண்ணீர் மல்கிய கண்களோடு, “மாமா, அப்பா கொதிக்கற ஜலத்திலதான் குளிப்பார்.  நான் வேணா வெந்நீர் மூணு ஸ்பூன் தெளிக்கலாமா?” என்ற கேட்க, சாஸ்திரிகள் முதற்கொண்டு அனைவரும் அவனைக் கட்டிக்கொண்டு "அடேய் சங்கரா… இப்படிப் பண்ணிட்டியேடா….." என்று வாய்விட்டு அழுதனர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home