Monday, March 18, 2019

ரெண்டு இட்லி, ஒரு சில்க் காட்டன்


"ரெண்டு இட்லி, ஒரு சில்க் காட்டன்"

சரியாகத்தான் காதில் வாங்கினோமா என்ற சந்தேகத்துடன் "என்ன சார்?” என்றார் சர்வர்.

"சரியாத்தாம்ப்பா சொன்னேன். நீங்கதானே கல்லாப்பெட்டி பக்கத்துல அத்தனை புடவையைத் தொங்கப் போட்டிருக்கீங்க? அதுலேயிருந்து அந்த பச்சை கலர் மெரூன் பார்டர் சில்க் காட்டனையும் சேத்து பில் போடுங்க" என்றேன்.

"சார் இங்க டிபன் சாப்பாடு மாத்திரம்தான் பில் போடுவோம். ஜவுளிக்கெல்லாம் நீங்க கவுன்ட்டரிலே தனியாத்தான் குடுக்கணும்.”

"அப்படீன்னா அதை ஏன் இங்க கொணர்நது வெச்சிருக்கீங்க?”

"சார்...ஓட்டல் முதலாளி ஜவுளி வியாபாரமும் செய்யறார்ங்கறதனாலே வந்து சாப்பிடறவங்களுக்கு அதுவும் தெரியணும்னு இப்படிப் பண்ணியிருக்காங்க. அதுக்கோசறம் ரெண்டையும் ஒண்ணா கலக்கக்கூடாதில்லீங்களா?”

"அப்படியா.. அப்ப சரி...நான் அப்புறமா சம்சாரத்தோடயே வந்து வாங்கிக்கறேன். இப்ப ரெண்டு இட்லியும் சாப்பிட்ட பெறகு ஒரு மினி காபியும் மாத்திரம் கொடுங்க" என்று சொல்லிவிட்டு நினைவுகளில் மூழ்கினேன்.

***

தொண்ணூறைத் தாண்டிய என் மாமனாருக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லை. இரண்டு மூன்று நாட்களாக சரிவர சாப்பிடவில்லை. மிக பலவீனமாகி படுக்கையிலிருந்து எழுந்து உட்காரக்கூட சக்தியில்லாமல் போயிருந்தார். வீட்டில் வயதான மனைவியும் சமீபத்தில் ரிடையர் ஆகியிருந்த அவரது மகனும்தான் இருந்தார்கள். மருமகள் ஏதோ விஷயமாக அவசரமாக வெளியூர் சென்றிருந்தாள்.

எப்பொழுதும் இரண்டு மூன்று நாட்களுக்கொருமுறை அம்மாவோடு இரவு செல்போனில் பேசுவது என் மனைவிக்கு வழக்கம். அவ்வாறு நேற்று பேசும்போதுதான் விஷயம் தெரிந்தது. மறுநாள் எப்படியும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்போவதாக அண்ணன் சொல்லியிருந்தாலும் என் மனைவிக்கு இருப்பு கொள்ளவில்லை. இப்பவே டிக்கட் கிடைக்குமா பாருங்க என்று நச்சரித்துக்கொண்டிருந்தாள். ஆனால் அதில் ஒரு பிரச்சினை. என் மனைவி இப்போதுதான் ஒரு மாதமாக முதுகுத் தண்டு வளைவிற்காக தீவிர சிகிச்சை எடுத்து முடித்திருக்கிறாள். எனவே நீண்ட நேரம் உட்கார்ந்து பயணிக்க முடியாது. தத்கலில்கூட டிக்கட் கிடைக்கவில்லை. எனவே மறுநாள் காலை டாக்சி வைத்துக்கொண்டு புறப்பட்டோம். நான் டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டேன். அவள் பின் சீட்டில் உடல்நிலைக்கு ஏற்றாற்போல் நேராகவோ சரிந்துகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ மாற்றி மாற்றி சமாளித்துக்கொண்டு வந்தாள்.

எண்பது வயதான என் தாயாரை தனியாக விட்டுவிட்டுச் செல்கிறோமே என்ற கவலை எனக்கு. என் தாயோ, "நீ ஒன்றும் கவலைப்படாதே. இப்போ அவங்களைப் போய்ப் பாக்கறதுதான் முக்கியம். அவங்க மருமக வர்ற வரைக்கும் பக்கத்திலே இருந்து அப்பாவுக்கு என்ன பண்ணனுமோ பாத்துண்டு வா. நான் இங்க நல்லாத்தானே இருக்கேன். ரெண்டு நாள் தனியா இருக்கறது ஒண்ணும் கஷ்டம் இல்ல… நீ தைரியமா போய்ட்டுவா… உன் உடம்பையும் பார்த்துக்கோ..” என்று என் மனைவிக்கு தைரியமூட்டி அனுப்பிவைத்தாள்.

பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் ஊர்போய்ச் சேர்ந்ததும் நேராக ஆஸ்பத்திரிக்குச் சென்றோம். நாங்கள் அங்கு வரும்வரை காலையிலிருந்துஅவருடன் இருந்த என் மைத்துனனை இரவு அவன் மீண்டும் அவருடன் படுக்கவேண்டி ஓய்வெடுக்க வீட்டுக்கு அனுப்பினோம். மாமனார் மிகவும் தளர்ந்துதான் போயிருந்தார். ஆனாலும் மகளைப் பார்த்தவுடனேயே ஒரு மகிழ்ச்சி. என் மனைவிக்கும் தந்தையைப் பார்த்து அருகில் அமர்ந்து அவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்வதில் ஒரு திருப்தி. காலையிருந்து தந்தையின் அருகிலேயே அமர்ந்திருந்த தாயை அருகில் உள்ள பெஞ்ச்சில் படுக்கச் சொல்லிவிட்டு நேரம் போவது தெரியமால் தாயும் மகளும் பேசிக்கொண்டிருந்தனர்.

***

என் மானமாருக்கும் மாமியாருக்கும் சர்க்கரை நோய் உண்டு. கடந்த பல வருடங்களாகவே அதற்கான சிகிச்சை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து கடந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் ஒருவரைப் பிரிந்து ஒருவர் சென்றதில்லை. இத்தனைக்கும் அவர்களுக்குள் முரண்பாடுகள் உண்டு. அவரால் குளிர் தாங்க முடியாது. ஆனால் மாமியாருக்ககோ வெப்பம் தாங்காது. அவருக்கு ஏசி ஒத்துக்கொள்ளாது. இவரால் ஏசி இல்லாமல் இருக்கமுடியாது. இருந்தாலும் கணவருக்காக தியாகம் செய்து கோடையின் வெப்பத்திலும் மின்விசிறியின் சூடான காற்றைத் தாங்கிக்கொண்டு அவருடனேயே அருகில் இருந்து அவரது ஒவ்வொரு தேவையையும் பார்த்துப்பார்த்து பூர்த்தி செய்துகொண்டு இருந்தார். மாமியாருக்கு க்ஷேத்ராடனம் செய்ய ஆசை. அவரால் ஊர் சுற்ற முடியவில்லை. அதனால் தன் ஆசைகளையெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டார் மாமியார்.

ஆஸ்பத்திரியில் கூட, "அம்மாவைப் பாரு. நீ எதுக்கு இங்க வந்து சிரமப்படணும், வீட்டிலேயே இருந்துக்கோயேன்னு சொன்னாகூட கேக்காம எப்பவும் எம்பக்கத்திலேயேதான் இருக்கனும்ன்னு சொல்லி ஒக்காந்துண்டே இருக்கா…" என்று என்று என் மகளிடம் புகார் செய்தார் அப்பா.

"எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. இவருக்குத்தான் நான் இல்லாட்டி எதுவுமே சரிப்படாது.. எந்தெந்த மருந்து சாப்பாடு எப்பப்ப தரணும்.. என்ன கலர் சட்டை போடணும்… எல்லாம் என்னைக் கேட்டுத்தான் செய்யறார். நான் அங்கே வீட்டில இருந்தா எப்படி சரிப்படும்?” என்று தன் சிரமத்தை மறைத்து கணவனுக்காகவே தன் வாழ்வை மாற்றிக்கொண்ட தாயார் அவருடைய புகாரை தள்ளுபடி செய்கிறார்.

***

இரண்டு நாள் கழித்து ஊருக்கு வந்த மருமகள் நேராக ஆஸ்பத்திரிக்கு வந்து, "அப்பா நான் வந்துட்டேன். என்னோட ரசம் சாப்பிட்டீங்கன்னாலே ரெண்டே நாள்ல உங்களுக்குச் சரியாயிடும் ..” என்று உற்சாகமூட்டினாள். "உன்னோட சாம்பார் கூட எனக்குப் பிடிக்கும்மா… " என்று தன் விருப்பத்தையும் சேர்த்துக்கொண்டார் பெரியவர்.

இடையில் அனைவரும் டிபன் சாப்பிட வெளியில் சென்றிருந்தபோது நான் மட்டும் அருகிலிருந்தேன். வாட்ஸப் விடியோவில் என் பேத்தியை அவருக்குக் காட்டினேன். அவளின் விசாரிப்பிலேயே நெகிழ்ந்திருந்தார் என் மாமனார். "சின்னக்குஞ்சூ….எப்படியிருக்கேடீ கண்ணூ…" என்று ஒரே கொஞ்சல். ஆறே வயதான அவளும் சளைக்காமல், "தாத்தா... நீங்க ஒடம்பு சரியானவுடனே இங்கே எங்க வீட்டுக்கு வந்திடுங்க…. நான் வேளாவேளைக்கு உங்களுக்கு சரியா மருந்தெல்லாம் குடுத்துப் பாத்துக்கறேன்…" என்று சொல்ல மேலும் நெகிழ்ந்தார்.

***

அறுபது வருடங்களுக்கு மேலான தாம்பத்திய வாழ்க்கையின் கடைசிக் கட்டங்களில் தன் கஷ்டங்களைப் பின்னுக்குத் தள்ளி துணையைச் சற்றும் பிரியாமல் பிள்ளையைப் போல் பார்த்துக்கொள்ளும் மனைவியா?

தன் உடல்நிலை சரியில்லாதபோதும் தந்தையை உடனே பார்க்கவேண்டும் என்று சிரமம் பார்க்காமல் நெடுந்தூரப் பயணம் மேற்கொள்ளும் மகளா?

வயதானாலும் தனியாக இருக்கவேண்டிய கட்டாயத்தைப் பொருட்படுத்தாமல் மருமகளுக்கு தைரியமூட்டி அனுப்பி வைக்கும் மாமியாரா?

புகுந்த வீடென்றாலும் மாமனாரைத் தந்தையைப் போலவே பாவித்து அவர் நலத்தில் அக்கறை கொண்ட மருமகளா?

உறவுகள் புரிபடா வயதிலும் பாசத்தால் பிணைக்கும் கொள்ளுப்பேத்தியா?

பெண் எந்த வடிவில் இருந்தாலும் இறைவிதான்.






0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home