Monday, June 13, 2016

கண்ணன் என் சேவகன் - 2016


(பாரதியார் இன்று இருந்திருந்தால் எப்படி எழுதியிருப்பார் என்ற கற்பனையில் உதித்த கவிதை)

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெல்லாம் தாம் மறப்பார்
வேலைமிக வைத்திடினோ வீட்டினிலே தங்கிடுவார்
ஏனடா நேற்றைக்கிங்கு வரவில்லையென்றால்
தேனாம்பேட்டையில் டிராபிக் ஜாம் என்பார்

வீட்டில் உடம்பு சரியில்லை ஒருநாள் லீவு வேண்டுமென்பார்
மாட்டினி டிக்கட்டை பாக்கெட்டில் மறைத்திருப்பார்
ஓயாமல் பொய்சொல்வார் ஒன்று சொன்னால் வேறு செய்வார்
நாயாகக் குரைத்தாலும் நம்வேலை செய்தொழியார்

நம்வீட்டுச் செய்தியெல்லாம் நாற்புறமும் பரப்புவார்
நாம் வீட்டில் இல்லையென்றால் தாமும் மறைந்திடுவார்
சேவகரால் பட்ட சிரமம் சொல்லி மாளாதாயினும்
சேவகர் இல்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை

இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான் வேலையேதும் தாவென்றான்
கார் பைக் ஒட்டிடுவேன் கரண்ட்டுபில் கட்டிடுவேன்
ஏர்போர்ட்டுக்குப் போய் ஏற்றிவிட்டுத் திரும்பிடுவேன்

சொன்னபடி கேட்பேன் சொல்லாததையும் செய்வேன்
என்ன வேலையென்றாலும் இங்கிருந்தே செய்திடுவேன்
ரேஷன் சாமான் வாங்கிடுவேன் ரேடியோ ரிப்பேர் செய்திடுவேன்
வேஷம் போடமாட்டேன் வெட்டியாய்த் திரியமாட்டேன்

இரவுபகல் பார்க்காமல் இங்கேயே நானிருப்பேன்
சிரமம் சிறிதும் பார்க்காமல் சீராக உழைத்திடுவேன்
கோடுகாட்டினால் போதும் ரோடே போட்டிடுவேன்
பாடுபட்டுச் சேர்த்தவற்றை பாங்காய் காத்திடுவேன்

படிப்பறிவில்லாவிடினும் பலசாலியாய் இருப்பதனால்
அடிதடிக்கஞ்சமாட்டேன் வம்பு சண்டை இழுக்கமாட்டேன்
பொய்பேசமாட்டேன் புறங்கூறமாட்டேன்
நையாண்டி செய்தாலும் நான் கலங்கமாட்டேன்

நேரத்தோடு வீடுசெல்ல நித்தம் விழையமாட்டேன்
நன்றியோடு உழைப்பேன் நால்வரிடம் விசாரித்து
பணியில் அடியேனை அமர்த்தினால் போதுமென்று
கனிவான சொற்களால் கருணை மனு கொடுத்தவுடன்

சொந்த ஊர் என்ன பெயர் தந்தை விவரமெல்லாம்
தந்துவிடு பரிசீலனை செய்வதற்கே என்றேன்; அவனோ
அன்னைதந்தை யாருமில்லை ஆயினும் அன்புடனே
கண்ணனென்றே அழைப்பர் அனைவரும் என்னையென்றான்

 உழைப்பால் உரமேறிய உடல் மற்றும்
உள்ளத்தூய்மையை வெளிக்காட்டும் கண் இவற்றால்
தக்கவன் கிடைத்த மகிழ்ச்சியுடன் இவனையாவது
தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆவலுடன்

வேலைக்குச் சேர்க்கின்றேன் இக்கணமே என்றாலும்
கூலி என்ன கேட்கின்றாய் கூறு என்றேன்
ஐயனே! கட்டுக்கட்டாய் பணந்தனைச் சேர்த்து
பையிலா கொண்டுபோகப் போகிறோம்

பண்பு மிக்கவரென்று பலர்சொல்லிக் கேட்டே தங்கள்
அன்பும் ஆதரவும் நாடித்தான் நான்வந்தேன்
காசு பெரிதில்லை காதல் பெரிதெனக்கு என்று
நாசூக்காய் நயமுரைத்தான்  நான் உணர வேண்டுமென்றே

பழையகாலப் பயித்தியம் இவனெனக் கண்டன்புடனே
அழைத்தவனை ஆளாகக் கொண்டுவிட்டேன் அன்றுமுதல்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது

கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன்
வாக்குவம் போடுகின்றான் வாஷிங் மெஷின் இயக்குகின்றான்; வீடு
காக்கும் வேலையையும் களைப்படையாமல் செய்கின்றான்

சம்சாரத்தின் கட்டளையை சடுதியில் முடிக்கின்றான்
மின்சாரக் கட்டணத்தையும் மிகவிரைவில் கட்டுகின்றான்
உள்வீட்டு வேலையெல்லாம் உடனடியாய் கவனித்தபின்
வெளிவேலை அத்தனையையும் விவரமாகவும் புரிகின்றான்

பார்க்கவேண்டிய இடங்களுக்கு ஸாரதியாகவும்;
பால் பலசரக்கு போன்றவற்றை கணக்காளனாகவும்
வீட்டுக் கடமையெல்லாம் மிகவிரும்பி ஏற்கின்றான்
விருந்தாளிகள் வந்தாலோ அன்பாக உபசரிக்கின்றான்

பள்ளிச் சிறார்களை வண்டியில் ஏற்றிவிடுகின்றான்
பாங்காக மாலையில் கூட்டியும் வருகின்றான்
வயிற்றுப் பசியென்றால் ஓட்டலில் பண்டமும்
வயிற்றுப் போக்கென்றால் டாக்டரிடம் டோக்கனும்

சற்றும் சுணங்காமல் சுறுசுறுப்பாய் வாங்கியே
சுற்றம் யாருக்கும் சிரமமில்லாமல் காக்கின்றான்
பெற்றோரும் பிள்ளைகளும் குதூகலமாய் குழைந்திட
உற்ற துணையாய் உடனிருந்து உவக்கின்றான்

வீட்டில் பிள்ளைகளுக்கு   விளையாடும் தோழனாய்;
விவேகமாய் முடிவெடுக்கும் மதியூக மந்திரியாய்;
நல்வழிகாட்டும் நம்பக ஆசானாய்
பற்பணியாற்றும் பணிவான சேவகனாய்

நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்
எங்கிருந்தோ வந்தான் எடுத்தாள்வீர் எனையென்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்

கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணமெல்லாம் அவனாகி இன்னலே மறந்துபோய்
செல்வம் செழிப்பு அறிவாற்றல் ஆரோக்கியம்
எல்லா வளமும் ஓங்கி உயருதுகாண்!

கண்ணனை நான் ஆட்கொண்டேன் கண்கொண்டேன் கண்கொண்டேன்
கண்ணனை ஆட்கொள்ளக் காரணமும் உள்ளனவே.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home