Monday, June 27, 2016

இதுதான் கட்டையா?

ஜீவ்தி வருகையை வழக்கம்போல் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.  ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கியிருந்த்தனால் இனிமேல் மாதம் ஒரு முறைதான் எங்கள் வீட்டிற்கு வர வசதிப்படும். அவளுக்கு அம்பத்தூர் வருவதென்றால் மிகவும் விருப்பம்.  என் மனைவியான அவளது பாட்டி மீது அத்தனை பிரியம்.  அத்தனை பேரும் வேண்டும் என்னும் அன்புமிக்க குழந்தை அவள் என்றாலும் பாட்டி மீது அலாதியான ஒட்டுதல்.  அந்த சனிக்கிழமை என் மனைவிக்கு விடுமுறை நாள் ஆதலான் நானும் பேத்தியின் வரவுக்காக அலுவலகம் போகாமல் ஒரு நாள் விடுமுறை எடுத்திருந்தேன்.
வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்தவுடன் மடிப்பாக்கத்தில் உள்ள அவளது வீட்டிற்கு வந்தவுடனேயே உடைமாற்றிக்கொண்டு தாயுடன் காரில் ஏறி நான் என்னுடைய அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் முன்னரே அவள் அம்பத்தூருக்கு வந்துவிட்டிருந்தாள்.  பிறகென்ன? கொஞ்சலும் ஆட்டமும் தான்.  இரண்டு நாட்கள் போவதே தெரியாமல் ஒரு நொடியில் பறந்துவிடும்.  இந்த முறையும் அதே மாதிரி தான்.
ப்ரி-கேஜியிலிருந்து எல்-கேஜிக்கு உயர்ந்திருக்கும் அவளுக்கு அவளுடைய பள்ளியில் நான்கு புத்தகங்களும் ஐந்து நோட்டுகளும் கொடுத்து திங்கட்கிழமை வரும்போது தவறாமல் அட்டை போட்டுக்கொண்டு வரும்படி பெற்றோருக்கு கட்டளையிட்டிருந்தனர் பள்ளி ஆசிரியைகள்.  எனவே, என் மகள் என்னிடம், “அப்பா, இவளையும் அழைத்துக்கொண்டு கடைக்குப் போய் இத்தனை புத்தகங்கள் மற்றும் நோட்டுகளுக்கு அட்டையும், பெயர் எழுத ஸ்டிக்கர் லேபிளும் வாங்கி வந்துவிடுங்கள்” என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.  என் பேத்திக்கு புத்தகம் என்றால் என்னவென்று தெரியும்.  நிச்சயமாக நோட்டுப்புத்தகம், லேபிள், அட்டை இதெல்லாம் என்னவென்றே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  ஆனாலும் வெள்ளி இரவிலிருந்தே, “தாத்தா, கட்டை வாங்கப் போகலாமா?” என்று கேட்டுக்கொண்டேயிருந்தாள். கட்டை இல்லை, அட்டை என்று திருத்தினேன்.   அப்போதைக்கு சரியாக உச்சரித்தாலும் சிறிது நேரம் கழித்து மீண்டும் கட்டை என்றே சொல்லிக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் பிடித்துக்கொண்டுவிடுவாள் என்ற நம்பிக்கையுடன் “இப்போது கடை மூடியிருக்கும் கண்ணா, காலையில் போய் நிச்சயம் வாங்கித்தருகிறேன்” என்று உறுதியளித்திருந்தேன்.
அடுத்த நாள் காலை எழுந்த உடனேயே ஆரம்பித்து விட்டாள், “தாத்தா, கடைக்குப் போகலாமா?” என்று உற்சாகத்துடன் புறப்பட்ட குழந்தையை தட்டிக்கழிக்க மனமில்லாமல் “வா, போகலாம்” என்று அவளையும் அழைத்துக்கொண்டு என்னுடைய மோட்டார்சைக்கிளில் அமர்த்திக்கொண்டு அருகிலிருந்த சூப்பர்மார்க்கெட்டுக்குச் சென்றேன்.
ஜீவ்தியை வண்டியிலிருந்து இறக்கி, ஒரு கையில் அவளுடைய சிறிய கையைப் பிடித்துக் கொண்டு, கடைக்குள் நுழைந்தவுடனே கடையில் வேலை செய்யும் பெண் எடுத்துக்கொடுத்த ப்ளாஸ்டிக் கூடையை மறு கையில் வாங்கிக் கொண்டு, இருவருமாக உள்ளே சென்றோம்.
மனதிற்குள் வாங்க வேண்டிய பொருட்களை ஒருமுறை ஞாபகப்படுத்திக்கொண்டேன்.  இல்லாவிடில் நான்தானே மீண்டும் இன்னொருமுறை வரவேண்டியிருக்கும்! குழந்தைக்கு அட்டை, லேபிள்கள், சாக்லெட், மனைவியின் ஆணைப்படி அன்றைய சமையலுக்கு கொஞ்சம் பச்சை வேர்க்கடலை, மற்றும் மதியம் விருந்தினரோ அல்லது மாப்பிள்ளையோ ஒருவேளை திடீரென்று வந்தால் எதற்கும் இருக்கட்டும் என்று சிறிது பழங்கள் மற்றும் கொரிக்க ஏதாவது ஸ்நாக் தின்பண்டங்கள் என்று மனதில் நினைவூட்டிக்கொண்டே உள்ளே நுழையும்போது முதலில் அங்கு என் கண்ணில் தென்பட்டது புதிதாக அப்போது வந்து இறங்கியிருந்த வேர்க்டலைதான்.  ஸ்டேஷனரி பொருட்கள்  எல்லாம் முதல் மாடியில் தான் இருக்கும்.  முதலில் இங்கு கிடைப்பவற்றை கூடையில் நிரப்பிக்கொண்டு பின்னர் மாடிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.
அழகாக ஆரஞ்சு நிற நைலான் இழையிலானாலன சிறுசிறு கைக்கடக்கமான பைகளில் நிரப்பியிருந்த கடலை பைகளில் இருந்து ஒரு பையை எடுத்து எனது ப்ளாஸ்டிக் கூடையில் போட்டேன்.

அதைப்பார்த்தவுடனேயே ஜீவ்தி சந்தேகமும் ஆச்சரியமும் கலந்து என்னைக் கேட்ட கேள்விதான் “தாத்தா, இதுதான் கட்டையா?” !!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home