Tuesday, June 28, 2016

பெரிய கதை

மதிய நேரத்தில் பெரியவர்கள் (அதாவது எனது மனைவியும் மகளும்) உணவுக்குப் பின்னர் சற்றே ஓய்வெடுக்கும் சாக்கில் மின்னல் வேகத்தில் உறக்கத்தில் வீழ, பேத்தியை மாத்திரம் இப்போது தூங்கவிட்டால் பின்னர் நள்ளிரவுக்கு மேலும் விழித்துக்கொண்டிருப்பாள் மேய்ப்பது கடினம் என்பதனால் ஓரிரு கதைகளைச் சொல்லி முடியுமட்டும் தூங்காமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு எனதாகியது.
கதை சொல்லட்டுமா என்று கேட்டவுடனேயே ஆர்வத்துடன் தலையாட்டிக்கொண்டே என் அருகில் வந்து படுத்துக்கொண்டாள்.
முதலில் சிங்கத்தின் குகையில் சிங்கம் தூங்கும்போது அதன்மேல் விளையாடி தொந்தரவு செய்த சுண்டெலியை கோபத்துடன் பிடித்து உள்ளங்கையிலேயே நசுக்க இருந்த சிங்கம், சுண்டெலி மிகவும் கெஞ்சிக்கூத்தாடி வேண்டிக்கொண்டதன்பேரில் மனமிரங்கி விடுவித்ததும், பின்னர் அதே சிங்கத்தை மிருகக்காட்சிசாலைக்கு வேண்டி வலையில் பிடித்து வண்டியில் ஏற்றும் சமயம் அந்த சுண்டெலி வலையைக்கடித்து சிங்கத்தைக் காப்பாற்றிய கதை.  ஆர்வத்துடன் கேட்டு முடித்த பின்னர், இந்தக் கதை உனக்குத் தெரியுமா? என்றேன்.  தெரியுமே என்றாள்.  யார் சொல்லியிருக்கிறார்கள் எனக் கேட்டதற்கு அம்மா சொல்லியிருக்கிறார்கள் என்றாள்.
அடுத்தது பஞ்சதந்திரக் கதைகளில் ஒன்றான காகத்தின் கதை.  தன்னுடைய கூட்டிற்குள் ஏறி தான் இடும் முட்டைகளையெல்லாம் சாப்பிட்ட பாம்பைக் கொல்ல தந்திரமாய் அரண்மனைக்குள் சென்று அரசியின் மாலையைக் கவர்ந்து தூக்கிக் கொண்டு காவலர்கள் பார்க்கும்படியாக பறந்து பாம்பின் புற்றுக்குள் அந்த மாலையைப் போட்டு அதனால் அவர்கள் புற்றைச் சிதைக்கும்போது வெளிவந்த பாம்பையும் கொன்றதன் மூலம் தன்னுடைய பழியைத் தீர்த்துக்கொண்ட கதை.  இந்தக் கதையையும் யாராவது சொல்லியிருக்கிறார்களா என்று கேட்டதற்கு ஆம், பாட்டி சொல்லியிருக்கிறார்கள் என்று பதில் சொன்னாள் என் பேத்தி.
பிறகு, தண்ணீரில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்த கட்டெறும்பை மரத்தின் மேல் அமர்ந்திருந்த புறா ஒரு இலையைக் கிள்ளி எறும்பின் அருகில் போட்டு அதன் உயிரைக் காப்பாற்றியதும், பின்னர் மற்றொருநாளில் வேடன் ஒருவன் இந்தப் புறாவைக் குறிவைத்து அம்பு செலுத்தத் தயாராவதைக் கண்ட அந்தக் கட்டெறும்பு அவன் காலைக் கடித்து அதனால் அம்பு செலுத்தும் கணத்தில் அவனது கவனம் சிதறி அம்பு திசை மாறி அதே புறாவின் குஞ்சுகளைக் கொத்திக் கொண்டு போக்க் காத்திருந்த வல்லூறு மேல் பட்டு அதுவும் இறந்த கதை.  இந்தக் கதை உனக்குத் தெரியுமா எனக் கேட்டதற்கு இதுவும் தெரியும் என்றாள்.  எனக்கே சற்று வியப்பாக இருந்தது.  யார் சொன்னார்கள் எனக் கேட்டேன்.  பெரிய பாட்டி என்றாள் (என் அம்மா – அதாவது அவளது கொள்ளுப்பாட்டியை அவள் அப்படித்தான் அழைப்பாள்).
அப்போதுதான் கவனித்தேன், எனது மகளும் சிறிது நேரமாக விழித்துக் கொண்டு பாதி கண்ணயர்ந்த நிலையில் இந்தக் கதைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள் என்பதை.  எனவே அவளிடம் கேட்டேன் பேத்தி சொல்வதெல்லாம் உண்மையா, இந்தக் கதைகளெல்லாம் ஏற்கெனவே அவளுக்குத் தெரியுமா என்று.  இல்லை அப்பா, நீங்கள் சொன்ன முதல் கதை -  அதுவும் நீங்களேதான் இதற்கு முன்னால் அவளுக்கு சொல்லியிருக்கிறீர்கள் – தவிர மற்ற இரண்டும் அவளுக்குத் தெரியாது என்றாள்.

அப்படியென்றால் அவள் ஏற்கெனவே பாட்டி, பெரிய பாட்டி சொல்லி எனக்குத் தெரியும் என்று சொல்கிறாளே என்றேன்.  அதெல்லாம் கதை என்றாள் என் மகள்.  இப்போது சொல்லுங்கள், யாருடைய கதை பெரிய கதை என்று!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home