Monday, December 2, 2019

நீதிபதி


நீதிபதி

ஓய்வு பெற்ற நீதிபதி தர்மராசு தனது விசாலமான வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து ஆனந்தமாக தன் பேரன் சுகுமாருடன் விளையாடிக்கொண்டிருந்தார்.

அவருக்கு ஒரு மகள், ஒரு மகன். திருமணமான மகள் வெளிநாட்டில் வசித்து வருகிறாள். மகன் பொறியியல் பட்டதாரி. உள்ளூரிலேயே நல்ல வேலை. திருமணமாகி இரண்டரை வயதில் பேரன். பள்ளிக்கு அனுப்ப இன்னும் காலம் இருப்பதால் வீட்டில் அவனுக்கு தாத்தாதான் நண்பன், மந்திரி, நல்லாசிரியன் எல்லாம்.

அன்று முற்பகல் அவனுடன் சிறிது நேரம் விளையாடியபின்பு களைப்படைந்த இருவரும் வரவேற்பறையில் இருந்த சோபாவில் உட்கார்ந்து மின்விசிறியைத் தூண்டிவிட்டு இளைப்பாறிக்கொண்டிருந்தனர். தர்மராசுவிடம் சுகுமார், தாத்தா … போரடிக்குது தாத்தா.. ஏதாவது கதை சொல்லு தாத்தா… என்று கெஞ்சினான். கதைதானே… என்னிடம் ஏராளமான கதை இருக்கு… வா ஒண்ணு சொல்றேன் இன்னிக்கு…. என்று கதை சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு ஊரிலே விறகு வெட்டி ஒருவன் இருந்தான்...என்று ஆரம்பிக்கும்போதே, விறகு என்றால் என்ன தாத்தா? என்று முதல் கணை தொடுத்தான் பேரன். மைக்ரோவேவ் காலத்தில் அமர்ந்துகொண்டு விறகைப் பற்றி பேசினால் குழந்தைகள் என்ன செய்வார்கள் பாவம்? அதனால் முதலில் பழையகால வாழ்க்கை முறை பற்றி சற்று விளக்கிவிட்டு பின்னர் கதையைத் தொடர்ந்தார் தர்மராசு...

அன்னிக்கு காட்டுக்குப்போய் காய்ந்த மரம் ஏதாவது பார்த்து அதை வெட்டி விறகு கொண்டுவந்தால்தான் அவன் வீட்டில் அடுப்பு எரியும்… அப்படி காட்டுக்குப்போய் விறகையும் வெட்டிக்கொண்டு வரும் வழியில் தாகமாக இருக்கவே, அங்கிருந்த குளத்தில் கைகால்கள் மற்றும் விறகு வெட்டும் கோடரியையும் சுத்தம் செய்துகொண்டு பின்னர் தண்ணீர் குடிக்கலாம் என்று குளத்தில் இறங்கி கோடரியைக் கழுவிக்கொண்டிருக்கும்போது அது வழுக்கி தண்ணீரினுள் விழுந்து விட்டது.. எவ்வளவு துழாவித் தேடியும் கிடைக்கவில்லை. அவன் அடுத்தநாள் பிழைப்புக்கு என்ன செய்வது என்று வருந்தி கவலைப்பட்டுக்கொண்டே குளத்திலிருந்து புறப்படும் வேளையில் அந்தக் குளத்திலிருந்து எழுந்த அழகிய தேவதை அவனை அழைந்து, ஏன் அழுகிறாய் என்று விசாரித்தாள். நீ யாரம்மா? என்று விறகுவெட்டி அவளைக் கேட்க, அவள், நான்தான் இந்தக் குளத்தின் தேவதை. இங்கு தண்ணீர் பருகும் மக்கள், விலங்குகள், பறவைகள் அத்தனையையும் நான்தான் இரட்சிக்கின்றேன். நீ ஏன் அழுகிறாய், உன் கவலை என்ன சொல், நான் தீர்த்துவைக்கிறேன் என்றாள்.

விறகுவெட்டி நடந்ததை விவரிக்க, அவள், ஒரு நிமிடம் இரு… என்று சொல்லி குளத்தினுள் மூழ்கி ஒரு தங்கக் கோடரியை எடுத்துவந்து இதுதானா உன்னுடைய கோடரி..பார்… என்று காண்பித்தாள். விறகுவெட்டி அதைப்பார்த்துவிட்டு இல்லை தாயே இது என்னுடையதில்லை .. என்றான். அவள் மீண்டும் மூழ்கி இம்முறை ஒரு வெள்ளிக் கோடரியை எடுத்துக் காண்பித்தாள். இதுவும் என்னுடையதில்லை… என்று விறகுவெட்டி கூற, மூன்றாம் முறை மூழ்கி அவனது இரும்புக் கோடரியை எடுத்து வந்தாள். அதைப் பார்த்த விறகுவெட்டி, அதுதான் தாயே.. இந்த பழைய கோடரிதான் என்னுடையது…. மிக்க நன்றி உனக்கு… என்று கூறி அதைக் கொடுக்கும்படி கேட்டான். ஆனால் தேவதையோ, விறகுவெட்டி, உன் நேர்மையை நான் மெச்சுகிறேன்… ஏழையாக இருந்தும் மற்ற பொருட்கள்மேல் ஆசைப்படாமல் உன்னுடையதை மட்டும் கேட்கும் உனக்கு இந்த தங்கக்கோடரி மற்றும் வெள்ளிக்கோடரியையும் என் பரிசாக அளிக்கிறேன்… எடுத்துக்கொண்டு இவற்றை தக்கவரிடம் விற்று உன் வறுமையைப் போக்கிக்கொள்.. என்று கூறி மூன்று கோடரிகளையும் அவனிடமே கொடுத்துவிட்டு நீரினுள் மூழ்கி மறைந்துவிட்டாள் அந்த தேவதை….. என்று கதையை நிறுத்தினார் தர்மராசு.

விரிந்த விழிகளுடன் வியப்பாக கதை கேட்டுக்கொண்டிருந்த பேரனைப் பார்த்தார். நீதியரசராக இருந்து ஓய்வு பெற்றவர் அல்லவா? தன் பேரன் எந்த அளவுக்கு இந்தக் கதையையும் அதன் நீதியையும் கிரகித்துக்கொண்டிருக்கிறான் என்று அறிய விரும்பினார். இதுலேர்ந்து என்ன தெரியறது கொழந்தே? என்றுஅவனைப்பார்த்துக் கேட்டார். புத்திசாலிக் குழந்தையல்லாவா அவன்? உண்மையைச் சொன்னா பரிசு கிடைக்கும்! என்று அவர் எதிர்பார்க்காத பதில் ஒன்றைக்கூறி அவரை ஆச்சரியத்தில் தள்ளினான்.

மிக்க மகிழ்ச்சியுடன், வெரி குட்… கதை இன்னும் முடியலே… இதோ கேளு… என்று மீண்டும் தொடர்ந்தார்.

மூணு கோடரியையும் கொண்டுபோய் வீட்டில அவனோட பொண்டாட்டிகிட்ட காட்டி நடந்ததெல்லாம் சொல்லி, அடியே.. இதை ரகசிமாய் வெச்சிக்கோ… யார் கிட்டயும் சொல்லாதே… நான் போய் அந்த வெள்ளிக்கோடரியை வித்து பணமாக்கிண்டு வரேன்.. மொதல்ல கடனையெல்லாம் அடைச்சிட்டு நம்ம வீட்ட சரி பண்ணிண்டு நிம்மதியா இருக்கலாம். நான் பாட்டுக்கு எப்பவும் போல வேலைக்குப் போறேன்.. அந்தத் தங்கக் கோடரியை பத்திரமா உள்ளே பூட்டி வை… எப்பவாவது தேவைப்படும்போது அதை எடுத்தாப்போதும்… என்று அவளுக்கு உத்தரவிட்டுட்டு எப்பவும்போல தான் வாழ்க்கையைத் தொடங்கினான் அவன்.

ஆனா இத்தனைநாள் எதுவுமே இல்லாம இருந்த அவன் திடீர்ன்னு எப்படி கடனையெல்லாம் அடைச்சான்.. வீட்டையெல்லாம் சரி பண்ணிண்டான்… அப்படீன்னு அவனோட பக்கத்து குடிசைல இருந்த இன்னொரு விறகுவெட்டியோட பொண்டாட்டிக்கு சந்தேகம் வந்துடுச்சு. அவ இவனோட பொண்டாட்டிகிட்ட துருவித் துருவி கேக்க ஆரம்பிச்சா. பொம்பளைங்ககிட்ட ரகசியம் நிக்குமா? அவ தங்கக் கோடரியைப்பத்தி மட்டும் சொல்லாம மத்ததெல்லாம் சொல்லிட்டா. அதைக்கேட்ட அந்த பக்கத்துவீட்டுக்காரி தன்னோட புருஷனையும் நீயும் அவன் போன அதே காட்டுக்குப் போய் அந்தக் குளத்திலே உன்னோட கோடரியைத் தூக்கிப்போட்டுட்டு அந்த தேவதை வரும்போது இதே மாதிரி உனக்கும் ஒரு வெள்ளிக்கோடரி கேட்டு வாங்கிட்டு வா.. அப்படீன்னு தினமும் நச்சரிக்க ஆரம்பிச்சா. அவளோட தொந்தரவு தாங்கமாட்டாம அவனும் ஒருநாள் இவனிடம் வழி கேட்டுண்டு அதே காட்டுக்குப் போனான்… என்று சொல்லி நிறுத்தினார்.

சுவாரஸ்யம் அதிகமான சுகுமார் எழுந்து அவர் அருகில் அணைத்தபடி உட்கார்ந்துகொண்டான். சொல்லு தாத்தா… அப்புறம் என்னாச்சு? என்று உற்சாகத்துடன் கேட்டான். சொல்றேன், சொல்றேன்… என்றபடி கதையைத் தொடர்ந்தார் தர்மராசு.

அவனும் அதே காட்டுக்குப் போனான். போனானா, அதே குளத்துக்கும் போய்விட்டான். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவனுடைய கோடரியை நன்றாக குளத்தின் நடுவில் விழும்படி வீசி எறிந்தான். எறிந்துவிட்டு, ஐயையோ என்னுடைய கோடரி போச்சே… என்று உரத்த குரலில் அழத் தொடங்கினான். அவன் எதிர்ப்பார்த்தாற்போலவே சற்று நேரத்தில் நீரில் சலசலப்பு கேட்டது. அந்த தேவதை குளத்தினுள்ளிருந்து பிரசன்னமாகி, யாரப்பா நீ, ஏன் அழுகிறாய்? என்று கேட்டாள். விறகுவெட்டி பேராசையுடன், என்னுடைய கோடரி குளத்தினுள் வழுக்கி விழுந்துவிட்டது… நான் பிழைப்புக்கு என்ன செய்வேன்? என்று அழுதான்.

அதைக்கேட்ட தேவதை, அழாதே… இரு, இதோ வருகிறேன்.. என்று சொல்லி குளத்தினுள் மூழ்கி வெளிவரும்போது இரண்டு கைகளிலும் தங்கக்கோடரி ஒன்றும் வெள்ளிக்கோடரி ஒன்றும் கொணர்ந்து இவைகளா உன்னுடைய கோடரி...பார்… என்றாள். விறகுவெட்டி பேராசையுடன், ஆமாம்! ஆமாம்! இவை இரண்டுமே என்னுடைய கோடரிகள்தான்…. கொடுங்கள்! கொடுங்கள்! என்று ஆவலுடன் கை நீட்டினான். கோபமடைந்த தேவதை, முட்டாளே! பேராசைக்காரனே! உன்னுடைய பழைய இரும்புக் கோடரியை வேண்டுமென்றே குளத்தின் நடுவில் நீ வீசியதை நான் அறியமாட்டேன் என்ற நினைத்தாயா? உழைத்து முன்னேற விரும்பாமல் உனக்கு சொந்தமில்லாததை அடைய ஆசைப்படும் உனக்கு நான் உதவிசெய்ய விரும்பவில்லை. மரியாதையாக இப்பொழுதே இங்கிருந்து செல்… இல்லாவிட்டால் உன்னையும் தண்ணீரில் மூழ்கடித்துவிடுவேன்! என்று ஆவேசமாக கூச்சலிட்டாள். ஐயோ, தெரியாமல் பிழை செய்துவிட்டேன்… என்னை மன்னித்து விட்டுவிடுங்கள் தாயே…. என்னுடைய இரும்புக் கோடரியையே கொடுத்துவிடுங்கள் போதும்… என்று பயத்துடன் கேட்டான் விறகுவெட்டி. கோபத்தில் கண்கள் சிவக்க, இப்போது இங்கிருந்து போகிறாயா இல்லையா? என்று அவனை நோக்கி தேவதை வேகமாக வருவதைக் கண்ட அவன் பயந்து தப்பித்தால் போதும் என்று பின்னங்கால் பிடறியில் பட, ஐயோ! அம்மா! காப்பாற்றுங்கள்! என்று அலறிக்கொண்டு ஓட்டமாய் வீடு வந்து சேர்ந்தான்.

என்ன ஆச்சு? என்று கேட்ட பெண்டாட்டியிடம், அடியே, உன் பேச்சைக்கேட்டு போனேன் பார், என்னைத்தான் நொந்துக்கணும்.. நல்ல வேளை… உயிரோட விட்டாள் அந்த தேவதை… என்று மூச்சிறைக்க உட்கார்ந்தான்...என்று கதையை முடித்தபடி, இப்போ சொல்லு… இதுலேர்ந்து என்ன தெரிஞ்சிண்டே? என்று கேட்டார் தர்மராசு. பேரனிடமிருந்து சிறிதுநேரம் பதில் வராததை உணர்ந்த அவர், இந்தக் கதையின் நீதியை - அதாவது, ஒன்று, பேராசைப்படக் கூடாது என்பது, இரண்டாவது, மற்றவர் பொருளின் மீது ஆசைப்பட்டால் இருப்பதும் போய்விடும் என்பது - உணர்த்தவேண்டும் என்று அவனுக்கு மெதுவாக விளக்கத் தயாரானார்.

சுகுமார் நிமிர்ந்து உட்கார்ந்தான். தாத்தா… இந்த விறகுவெட்டி என்ன தப்பு செஞ்சான் தாத்தா? அவன் பெண்டாட்டி சொல்லித்தானே அவன் குளத்துக்குப் போனான்? அவனா ஒண்ணும் தப்பு செய்யலியே? அதுவுமில்லாம அந்த இரும்புக் கோடரி அவனோடதுதானே? அதை எப்படி அந்த தேவதை தரமாட்டேன்னு சொல்லலாம்? அவனோட கோடரியை தேவதை எடுத்துண்டா அது தப்பில்லையா? என்று கேட்ட பேரனைப்பார்த்து வாயடைத்துப்போனார் தர்மராசு.

அப்பா…கொழந்தே…. நீ சொல்றது ரொம்ப சரி…. இதே கதையை என்னோட தாத்தா, அப்பா சொல்ல நான் கேட்டிருக்கேன்… ஆனா இப்படி யோசிக்க எனக்கு அப்பவும் தோணலை, இப்பவும் தோணலையே? பதவியில்தான் நான் நீதிபதி… உண்மையில் நீதான் நீதிபதி… நீதின்னா எப்படி இருக்கணும்னு எனக்குப் புரியவெச்சிட்டியே…அந்த தேவதை செஞ்சது தப்புதான். அவனுக்கு புத்தி சொல்லி அவனோட கோடரியை அவங்கிட்டயே குடுத்திருக்கணும்… அதுதான் சரி…. என்று கண் கலங்க அவனை எடுத்து அணைத்துக்கொண்டு உச்சிமோர்ந்தார் தர்மராசு.





0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home