Tuesday, March 28, 2023

திருஷ்டி தானம்

 (கன்னட மூலம் - மூலம் திரு.பண்டரிநாத்தாச்சாரி கலகலி)



அலக் நிரஞ்ஜன் அலக் நிரஞ்ஜன்
பக்திப்பழமாய் நின்றான் பைராகி
கனிவுடன் நடந்தே கதவருகில் நின்று
பிக்ஷை கேட்டான் அ(வ்)யோகி

நெற்றியில் திருநீறும் நெஞ்சினில் சந்தனமும்
தரித்தே நின்றானே சந்நியாசி
காதினில் தேனாய் காந்தக் குரல் கேட்டு
கடைக்கண்ணால் நோக்கினாள் கயல்விழி

இதயம் தான் தவித்ததே மெய்யும் தான் சிலிர்த்ததே
மனக்கதவு திறந்து தட்டியதே
அழகனவன் வதனத்தின் அற்புதவொளி அவள்
ஆழ்மனதில் மின்னல் வெட்டியதே

இதுவரை அடக்கிய மனக்குதிரையின் கடிவாளம்
இன்று மட்டும் ஏன் தளர்ந்ததே
எண்ணித்தான் பார்க்கையில் ஏந்திழையின் மெல்லிய
கன்னம் இரண்டும் சிவந்ததே

அலக் நிரஞ்ஞன்..மறுநாள் காலையில்
மறுபடி அவன் குரல் ஒலித்ததே
ஆரணங்கு அவளின் அழகிய கண்களில்
ஆயிரம் வண்ணங்கள் ஜொலிக்குதே

மணிக்குரல் கேட்டதும் மாயாஜாலத்தைப்போல்
எண்ணிய சபதமும் மறந்ததே
வில்விட்ட மலர்க்கணை வேகமாய்ப் பாய்வது போல்
கால்களும் வெளியேற விரைந்ததே

ஆடையை சரிசெய்து ஆவலுடன் அவனருகில்
அழகாக நின்றிட்டாள் அம்மாது
ஆசையெல்லாம் திரட்டி அமுத மொழியினில்
அவனிடம் பேச்சிட்டாள் அன்போடு

நில்லுங்கள் யோகியே உங்கள் கண்களின்
ஜோதியே என்னுள் குவிகிறதே
அதில் ஆதவன் அம்புலி அல்லி மலருமே
நாணத்தில் தம்தலை கவிழ்கிறதே

வியந்த போதிலும் அமைதியாய் அங்கிருந்து
விரைவாகக் கடந்தான் வீதிவழியே
அலக் நிரஞ்ஜனவென மறுநாளும் வந்திடவே
மையலுடன் வந்தாளே மைவிழியே

தாயே பெறுகவென தன்னுடைய திருவோட்டை
அவளைநோக்கி நீட்டினவே அவள் கைகள்
தண்ணீர் என்றெண்ணியவள் தன்விழியால் கண்டதுவோ
செந்நீரில் தத்தளித்த அவன் கண்கள்!

உன் பார்வை மயங்கிட காரணமாய் இருந்திட்ட
என்புறக்கண் இன்புடனே தந்திட்டேன்
அன்புடன் பெற்றென்னை அருள்வாய் அமுதிட்டவளே
என்றவள் அகக்கண்ணை திறந்திட்டானே

அலக் நிரஞ்ஜன் அலக் நிரஞ்ஜன்
வலியின்றித் தொடர்ந்தான் சந்நியாசி
ஊனக்கண் கொண்டு ஞானக்கண் திறந்தான்
விழியின்றி வழிகாட்டிய தவயோகி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home