Thursday, October 5, 2023

பஞ்ச நரசிம்ம க்ஷேத்ர பயணம் (30 Sep - 2 Oct 2023)

 


மங்களகரமாக மங்களகிரியில் துவங்கியது எங்கள் பஞ்ச நரசிம்ம க்ஷேத்ர பயணம். சென்னையிலிருந்து விஜயவாடாவுக்கு ரயிலில் வந்து அங்கிருந்து இரண்டு பேருந்துகளில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள் அமிர்தம் திவ்ய தேசம் யாத்ரா குழுவினர். அதன்படி அதிகாலை விஜயவாடாவில் இறங்கிய உடனே மங்களகிரி சென்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைகளில் குளித்து உடைமாற்றி கோவிலுக்குச் செல்ல தயாரானோம்.


மங்களகிரியில் மூன்று நரசிம்ம ஸ்வாமி கோவில்கள் உள்ளன.  ஒன்று, அடிவாரத்தில் அமைந்துள்ள லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில்.  மிக வித்தியாசமான நெடிய அமைப்புடனான கோபுரத்தைக் கொண்ட அழகிய கோவில் இது. இந்த கோபுரத்தின் சாயலில்தான் கர்நாடகாவில் முர்தேஷ்வர் கோவில் கோபுரமும் வடிவமைத்தார்களோ என்ற எண்ணம் இந்த இரண்டு கோபுரங்களையும் பார்த்தவர்களுக்கு நிச்சயம் தோன்றும். அதிகாலை என்பதனால் அவ்வளவாக கூட்டம் இல்லை.  ஸ்வாமியையும் ராஜ்யலக்ஷ்மி தாயாரையும் தரிசித்துக்கொண்டு சற்று உயரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பானக நரசிம்ம ஸ்வாமி கோவிலுக்கு விரைந்தோம்.  


   


600-700 படிகள் கொண்ட பாதை இருந்தாலும் பயணிகளில் பெரும்பாலோர் அந்தஸ்த்தானவர்கள் (மூத்த குடிமக்கள்) என்பதாலோ என்னவோ மலைக்குச் செல்ல தலா ஆறுபேர் அமரும் ஆட்டோக்களை அமர்த்தி அனுப்பி வைத்தனர். யானை வடிவத்தில் உள்ள கண்டல மலையில் உள்ள இக்கோவில் மிகவும் பிரசித்தமானது. அதற்குக் காரணம் இங்குள்ள நரசிம்மர் எவ்வளவு பெரிய அல்லது சிறிய பாத்திரத்தில் பானகம் கொடுத்தாலும் அதில் சரிபாதி அளவே வாங்கிக் கொண்டு மீதியை ஏற்றுக் கொள்வதில்லை என்னும் அதிசயம்தான்.  தனியாக சிலை என்று ஒன்றில்லாமல் மலையில் சுயம்புவாக அமைந்துள்ள ஒரு துவாரத்தை வாயாகக் கொண்டு அதைச் சுற்றி நரசிம்மர் முகத்தை உலோகத்தில் அமைத்துள்ளனர்.  அந்த துவாரத்தில் பானகம் உட்செலுத்தும்போது நாம் விழுங்குவது போலவே களக் களக் என்று ஓசை வருமாம். பாதியளவு சென்ற பின் சப்தம் நின்று சிறிது பானகம் துவாரத்திலிருந்து வெளிவந்து விடுமாம்.  வெளிவரும் அந்த பானகத்தோடு கையில் மீதமிருக்கும் பானகத்தையும் சேர்த்து நமக்கே பிரசாதமாக கொடுத்து விடுகின்றனர்.


இதில் இன்னுமொரு அதிசயம் என்னவென்றால் இந்த மலையில் தண்ணீர் வசதி கிடையாது. அருகிலிருக்கும் சுனையிலிருந்து நீரைச் சுமந்து வந்து வெல்லம் மிளகு கரைத்து பானகம் தயாரிக்கிறார்கள். கரைக்கும் இடத்திலும் சரி, சுற்றிலும் பானகம் சிந்தும் இடத்திலும் சரி, ஒரு ஈ எறும்புகூட வருவதில்லை என்பதே அந்த அதிசயம். இரண்டு லிட்டர் பானகம், கற்கண்டு (95%) முந்திரி (5%) கலந்த ஒரு சிறு பாலித்தீன் பாக்கெட், லாமினேட் செய்யப்பட்ட சிறிய படம் ஆகியவை சேர்த்து 90 ரூபாய். தரிசனம் முடிந்த பின் பானகத்தை நமக்கே டம்ளரில் ஊற்றிக் கொடுக்கிறார்கள். அது நீண்ட நேரம் நிற்காது, புளித்துவிடும் என்பதால் ஊருக்கு எடுத்துச் செல்ல பரிந்துரைப்பதில்லை. ஸ்வாமி பானகம் ஏற்றுக்கொள்வது ஒரு அதிசயம் என்றால், ஒவ்வொருநாளும் ஓயாமல் பக்தர்கள் தரும் பானகம் எல்லாம் எங்கே போய் சேர்கிறது என்பதுவும் விளங்காத ஒரு அதியசம்.  சக பிரயாணி ஒருவரிடம் இதைப்பற்றி கேட்டேன்.  அவரது பதில் என்னை வியப்பிலாழ்த்தியது - ஸ்வாமி ஸ்வீகரிச்சுண்டார், அவ்வளவுதான்!


கூட்டம் காரணமாகவோ என்னவோ, சொம்பு நிறைய நாம் தரும் பானகத்தை அப்படியே ஸ்வாமி வாய் துவாரத்தில் ஊற்றாமல், அவர்கள் வைத்திருக்கும் சிறு பாரத்திரத்தில் அவசரகதியில் ஓரிருமுறை மொண்டு ஊற்றி மீதியை நம்மிடம் கொடுத்துவிடுகின்றனர் பட்டர்ஸ்வாமிகள். அதுபோலவே, நாம நக்ஷத்திரம் கேட்கும்போது இரண்டு பேருக்கு மேல் குடும்பத்தினர் பெயரை நாம் சொல்லத் தொடங்கும்போதே இடைமறித்து ஸஹ குடும்பானாம் என்று முடித்தும் விடுகின்றனர்! 


பானக நரசிம்மரை தரிசித்துக் கொண்டு அருகிலிருக்கும் பாதை வழியே சற்று மேலே சென்றால் ராஜ்யலக்ஷ்மி தாயார் சந்நிதியும், ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் ஸ்ரீநிவாசப் பெருமாள் சந்நிதியும் உள்ளன.  பாறையிலேயே செதுக்கப்பட்டு செந்தூரம் பூசி நாணயங்கள் ஒட்டப்பட்ட பெரிய ஆஞ்சநேயர் சிற்பமும் கண்ணைக் கவர்கிறது.  இந்த மலையிலிருந்து கீழே உள்ள கோவிலும் கோவிலைச் சுற்றி உள்ள மங்களகிரி ஊரும் அற்புதமாக காட்சி அளிக்கின்றன.


   


இதற்குள் நேரம் ஆகி, பானகமெல்லாம் ஜீரணமாகி வயிற்றுப்பூஜைக்கு மணி அடிக்க ஆரம்பித்துவிட்டதால் மலை உச்சியில் உள்ள கண்டல நரசிம்ம ஸ்வாமி கோவிலுக்கு நாங்கள் செல்லவில்லை. யாரும் அதைப்பற்றி அவ்வளவாகப் பேசவும் இல்லை. அடிவாரம் வந்து சுடச்சுட பொங்கல், வடை, கேசரி, காபி என ஒரு கை பார்த்தோம்.  (இதற்குத்தான் அமிர்தம் + திவ்யதேச யாத்ரா என்று பெயர் சூட்டினார்களோ?).  அடுத்த க்ஷேத்ரத்திற்கு செல்ல வண்டி ஏறினோம்.  வண்டி ஏறும்போதுதான் தெரிந்தது, சற்று அருகில் வேறு இடத்தில் அறைகள் கொடுக்கப்பட்டிருந்த சிலர் காத்திருக்கும் நேரத்தில் கடைக்குச் சென்று பிரசித்திபெற்ற மங்களகிரி காட்டன் சேலைகள் வாங்கி விட்டனர் என்ற விஷயம்.  இது எப்படி மற்ற பெண்மணிகளுக்குத் தெரியாமல் போனது என்பது எங்கள் கண்ணெதிரே நிகழ்ந்த மற்றுமோர் அதிசயம்.


அங்கிருந்து சுமார் நான்கு மணிநேர பயணத்திற்குப்பின் வேதாத்ரி என்னும் இடத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ யோகானந்த லக்ஷ்மிநரசிம்ம ஸ்வாமி கோவில் சென்றடைந்தோம்.  அங்குள்ள மண்டபத்தில் அனைவருக்கும் அருமையான மதிய உணவு பறிமாறப்பட்டது.  உணவுக்குப்பின், கோவில் திறந்திருப்பதாகக் கேள்விப்பட்டு கோவிலுக்குச் சென்றோம். என்ன அதிசயம்! இந்த ஒரு க்ஷேத்ரமே பஞ்ச நரசிம்மர்கள் அருள்பாலிக்கும் இடம் என்பதை அறிந்து வியப்படைந்தோம்.


     


தரையில் வைத்தால் கால் பொசுங்கும் வெய்யிலிலும் மக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கோவிலுக்குள் நிழலில் குழந்தை குட்டிகள் சகிதம் படுத்து உறங்கிக் கொண்டிருந்ததையும் கண்டோம். அருகில் கிருஷ்ணவேணி என்றழைக்கப்படும் கிருஷ்ணா நதி ஓடிக்கொண்டிருந்தாலும் காற்றில் அதன் குளுமை தென்படவில்லை. கோவில் மாலை ஐந்தரை-ஆறு மணிக்குள் மூடப்படும் என்பதால் அந்த வெய்யிலிலும் பக்தி சிரத்தையோடு வந்து வழிபடுவதைக் காண்கையில் இறை நம்பிக்கை கொண்ட மனிதர்கள் உள்ளவரையில் நம் ஊரில் தற்போது காணப்படும் சனாதன எதிர்ப்பு எல்லாம் கூடிய விரைவில் காணாமல் போகும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.


   


மூல மூர்த்தி ஸ்ரீ யோக நரசிம்மராகவும், அருகில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மராகவும் சந்நிதியில் உள்ளார்.  வெளியில் உள்ள மலை உச்சியில் ஜ்வாலா நரசிம்மராக அருட்காட்சி தருகிறார். மேலும் கிருஷ்ணா ஆற்றில் மிகப்பெரிய சாளக்ராம நரசிம்மராகவும் நீரில் இருந்துகொண்டே அருள்பாலிக்கிறார்.  இவற்றைத் தவிர சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கருடாத்திரி மலையில் வீர நரசிம்மராகவும் எழுந்தருளியிருக்கிறார்.  இவரைத் தவிர மற்ற நான்கு நரசிம்ம மூர்த்திகளையும் தாயாரையும் சேவித்துக்கொண்டு ஆலமரம், குரங்குகள், அரணை, நம் ஊரைப் போல் இல்லாமல் கண்ணுக்குத் தெரியாமல் ஆனால் கடித்தால் மட்டும் உணரும் மிகச் சிறிய கொசுக்கள் போன்ற இயற்கை எழில் சூழ்ந்த இந்த இடத்தை விட்டு கிளம்ப மனமில்லாமல் கிளம்பினோம்.  சாப்பாடு சற்று நேரத்திற்கு முன்னர் தான் முடிந்திருந்தாலும், ஸ்வாமி தரிசனம் முடிந்து வந்ததுமே  காபியும் தயாராக இருந்தது. காபிக்கு மாத்திரம் நேரம் காலம் கிடையாது. எதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் ஸஜ்ஜனம் இருக்கையில் கவலை ஏது!


உணவும் உண்டு காபியும் குடித்த களைப்பு தீர குளிர்சாதன பேருந்தில் அவரவர் விருப்பத்திற்கேற்ப அரட்டையிலோ காதில் பொருந்தும் கருவியின் துணையோடு பாட்டு கேட்டுக்கொண்டோ பயணம் செய்து இரவு மட்டப்பள்ளி சென்றடைந்தோம்.  அருகருகான இரு வேறு இடங்களில் ஒதுக்கப்பட்டிருந்த அறைகளில் தங்கினோம்.  விடுதியிலேயே இரவு உணவு பாக்குமட்டை தட்டுகளில் கொண்டுதரப்பட்டது.  அதிகாலை விஸ்வரூப தரிசனம் உண்டு என்று அறிவிக்கப்பட்டதால் அதற்கேற்ப அலாரம் வைத்துக்கொண்டு உறங்கச் சென்றோம்.  இப்படியாக முதல் நாள் நல்லபடியாக முடிந்தது.


சிற்றஞ்சிறுகாலே சென்றவனை சேவிக்க முனைந்தாலும் நமக்கு முன்னரே எப்படித்தான் இத்தனைபேர் தயாராகிறார்களோ என்னும்படி விஸ்வரூப தரிசனத்திற்கான இடங்கள் ஏற்கெனவே நிரப்பப்பட்டு அடுத்த சேவையான திருமஞ்சனத்திற்குத்தான் இடம் கிடைத்தது.  


மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்ற சொல்லிற்கேற்ப பரம பக்தனுக்கு தானே காட்சி தந்த பரமனின் இந்த ஆலயம் சுவாரசியமான தல புராணங்களைக் கொண்டது.  அவற்றை தனியே இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.  சிறிய குகை போன்ற இடுக்கில் நுழைந்து இருக்கும் இடத்தில் ஒரு சுற்றுக்கு பத்து பதினைந்து பேராக உள்ளே அனுப்புகிறார்கள்.  ஒரு அடி உயரமே ஆன பாறையில் செதுக்கப்பட்ட நரசிம்மர் சிலைக்கு திருமஞ்சனம் செய்வதைக் மிக அருகில் நின்று கண்ணாரக் காண முடிந்தது நம் மூதாதையர் செய்த புண்ணியத்தின் பலன் என்றுதான் தோன்றுகிறது. அருகில் இருக்கும் பிரகல்லாதரை காலை திருமஞ்சன நேரத்தில் மட்டும்தான் காணமுடியும் என்பதை அறிந்தபோது மனம் இன்னும் நிறைவடைந்தது.  சிறு சிறு குழுக்களாக திருமஞ்சன தரிசனம் செய்வித்த பின்னர் அனைவரையும் வெளியில் உட்கார வைத்து பின்னர் அலங்காரம் முடிந்த பின்னர் மீண்டும் உள்ளை அழைத்து சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்விக்கிறார்கள்.  மிகத் திருப்தியான தரிசனம் முடிந்த கையோடு வெளியில் வந்து கிருஷ்ணா நதி தீரத்தில் குளிர்ந்த காலை நேரத்தில் சுடச்சுட காபியும் குடித்துக்கொண்டே போட்டோ எடுப்பது எவ்வளவு சுகமான அனுபவம்!


   


மட்டப்பள்ளி உண்மையில் மகத்தான பள்ளி என்பதை நேரில் கண்டுகொண்டு அடுத்த க்ஷேத்ரமான கேதாவரம் நோக்கி புறப்பட்டோம்.  காலைச் சிற்றுண்டி முடிததுக் கொண்டுதான், சந்தேகம் வேண்டாம்!


தெலுங்கானா பிரதேசத்தின் இயற்கை வளம் பிரமிக்க வைக்கிறது.  சுற்றிலும் ஆற்றுப்படுகை என்பதால் பசுமைக்குப் பஞ்சமே இல்லை. பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சைநிறம் தோன்றுதடா நந்தலாலா என்று பாடிய பாரதி இங்கு பிறந்திருந்தால் நந்தலாலாவுக்கு பதிலாக நரசிம்மா என்றே பாடியிருப்பார்.  நீங்களே பாருங்கள்.



கிட்டத்தட்ட இரண்டு மணிநேர பயணத்திற்குப் பின் கேதாவரம் கோவிலுக்குச் செல்வதற்காக கிருஷ்ணவேணி ஆற்றின் மறுபக்கத்தில் அமைந்திருந்த இடத்திற்கு சென்றடைந்தோம்.  இங்கிருந்து படகில் அக்கரையை அடைந்து பின்னர் மலை ஏற வேண்டும்.


சுமார் 15-20 நிமிட படகு சவாரிக்குப் பின் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அடிவாரம் அடைந்து அங்கிருந்து 200-250 படிகள் ஏற வேண்டும்.  ஆனால் நம் பயணிகளின் சராசரி வயதை மனதில் கொண்டு படகு சவாரி முடியும் இடத்திலிருந்தே வாகன சவாரியும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.   டிராக்டர் அல்லது குட்டி யானை என்றழைக்கப்படும் சிறிய டிரக் வண்டியில் பயணம்.  பார்ப்பதற்கு எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் தோன்றினாலும், ஏறி இறங்குவதற்கும் சரி, பயணிப்பதற்கும் சரி, பழக்கமில்லாதவர்களுக்கு சற்று சிரமமான அனுபவம் தான் என்பதை நேரில் அறிந்து கொண்ட இடம் இது.









காட்டின் நடுவே மலைப்பாதையில் நடந்து ஏறுவதை விட வண்டியில் உட்கார்ந்தோ நின்றோ ஏறுவது இன்னமும் சிரமம் என்பதை இவ்விடததில் தெரிந்துகொள்ளலாம்.  சீரற்ற கற்களின் மேலும், மழைநீரால் குழிவிழுந்த மண்ணிலும் இந்தப்பக்கமும் அந்தப் பக்கமும் சாய்ந்து உடம்பை ஒரு குலுக்கு குலுக்கின்றது இப்பயணம்.  


கேதாவரம் கோவில் இப்பேது நன்றாக சீரமைக்கப்பட்டு வண்ணங்கள் ஏற்று புதுப்பொலிவுடன் மலையின் மேல் பார்ப்பதற்கே ரம்யமாக விளங்குகிறது.  சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் நரசிம்மரையும் செஞ்சுலக்ஷ்மி தாயாரையும் தனித்தனி சந்நிதிகளில் தரிசிக்கலாம். உயரத்தில் உள்ள கோவிலில் இருந்து அகண்ட கிருஷ்ணா நதியையும் அதன் கரையில் அமைந்துள்ள கிராமத்து வீடுகளையும் காண்பதே ஒரு அற்புதக் காட்சி.  பெரிய ஏரி போல் காட்சி தருகிறது கிருஷ்ணா நதி.


           


இக்கோவிலில் தரிசனம் பட்டர் ஸ்வாமிகளின் வருகையைப் பொருத்தே அமையும்.  முன்னதாகவே தகவல் தொடுத்து வைத்தால் நாம் வரும் நேரத்திற்கு அவரும் வந்து தரிசனம் செய்து வைப்பார்.  தகவலின்றி பிரயாணம் மேற்கொள்வது நல்லதல்ல.  குகை போல் உள்ள சிறிய சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வஜ்ர நரசிம்ம ஸ்வாமியை தரிசித்துக்கொண்டபின் சற்று உயரத்தில் அமைந்துள்ள மற்றொரு சந்நிதியில் தாயார் செஞ்சுலக்ஷ்மை அம்மகாருவையும் தரிசனம் செய்து கொண்டு இறங்கி ஏறிய களைப்பு தீர சிறிது நேரம் இளைப்பாறி, மீண்டும் வேண்டாவிருப்பமாக அதே டிராக்டரிலேயோ குட்டியானையின் மீதோ வந்த வழியே இறங்கி நதியைக் கடக்க வேண்டியதுதான்.


சுற்றுமுற்றும் எந்தவிதமான கடை கண்ணியும் கிடையாது.  தண்ணீர் கூட கிடைக்காது.  வேறு வழியின்றி இரண்டு மணிநேரம் வெய்யிலில் வாடி வதங்கி திரும்பும் வழியில் நடு நதியில் படகிலிருந்தே பாட்டிலில் கிருஷ்ணா நதி நீர் நிரப்பி மீன்கள் எதுவும் இல்லையென்று உறுதி செய்துகொண்டு குடித்தோம்.  நன்றாகத்தான் இருந்தது.  மீண்டும் பேருந்தில் ஏறி கண்ணில் தென்பட்ட முதல் கடையில் சில்லென்று பாட்டில்களில் தண்ணீரும் கொரிக்க ஹல்திராம் சன்னா பாக்கெட்டுகளும் வாங்கிய பின்னர்தான் அது மதுக்கடை என்பதையே தெரிந்து கொண்டோம்!  நரசிம்மர் மன்னிப்பார் என்ற நம்பிக்கையுடன் மட்டப்பள்ளி வந்து சேர்ந்தோம்.  


மதிய உணவுக்குப் பின்னர் மட்டப்பள்ளியில் தங்கியிருந்து அறைகளிலிருந்து உடைமைகளை எடுத்துக்கொண்டு வாடப்பள்ளி (வாட பல்லி?) செல்ல பேருந்து ஏறினோம்.  பசுமை நிறைந்த குறுகலான பாதைகள் வழியாக ஒரு வழியாக நெடுஞ்சாலை அடைந்து வண்டி வேகம் பிடித்தது. மாலை ஆறு மணி அளவில் கோவில் சென்றடைந்தோம்.


அகத்தியர் பிரதிஷ்டை செய்ததாக அறியப்படும் இக்கோவில் நரசிம்மர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார்.  ஹிரண்யனை வதம் செய்துவிட்டு வரும் வழியில் இங்கு தங்கியிருக்கும்போது உக்ரமாக இருந்ததனால் மேல்மூச்சு வாங்கியபடி இருந்ததாக நம்பப்படும் இம்மூர்த்தி, ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்போதும் மூச்சுவிட்டுக்கொண்டு இருப்பதாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக இவரது சந்நிதியில் இரு விளக்குகள் எப்போதும் ஒளிர்ந்த வண்ணம் உள்ளன.  அவரது முகத்தின் அருகே உள்ள விளக்கின் ஜோதி காற்றில் அசைவதையும், அவரது பாதத்தின் அருகில் உள்ள விளக்கின் ஜோதி அசைவற்று நிற்பதையும் இன்றும் காணலாம்.எந்த ஒரு நல்ல காரியத்தையோ, யாத்திரையோ தொடங்கும் முன் இங்கு வந்து வழிபட்டு நரசிம்மர் அருளுடன் தொடங்கினால் காரியம் நல்லபடியாக நிறைவேறும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே பரவலாக இருக்கிறது.


                                    


இவ்விளக்குகளை தொடர்ந்து ஒளிரச்செய்ய விருப்பமுள்ள பக்தர்களிடமிருந்து ஓராண்டுக்கு ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு சங்கல்பம் செய்கிறார்கள். இவ்வாறு செய்தால் நோய் நொடியின்றி ஆரோக்கியமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.


இவ்வாறாக கடைசியாக வாடப்பள்ளி நரசிம்மருடன் பஞ்ச நரசிம்மரையும் சேவித்துக்கொண்டு அடுத்த க்ஷேத்ரமான பத்ராசலம் செல்லத் தயாரானோம்.  வழியில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டோம். நாள் முழுவதும் கடும் வெய்யிலில் வெவ்வேறு வாகனங்களில் பயணம் செய்த களைப்பு அனைவரையும் அடுத்த நொடியே கண்ணயர வைத்தது.  



மூன்றாம் நாள் அதிகாலை இரண்டரை மணிக்கு பத்ராசலம் சென்றடைந்தோம்.  நாலரை மணிக்கு விஸ்வரூப தரிசனம் என்பதனால் விருப்பமுள்ளவர்கள் அருகிலேயே உள்ள கோதாவரி நதியில் நீராடி கோவிலுக்குச் செல்லலாம் என்று அறிவுறுத்தப் பட்டோம்.  அதன்படியே அவசர அவசரமாக சாமான்களை அறைகளில் வைத்து பூட்டிவிட்டு நதிக்கரைக்குப் புறப்பட்டோம்.  எதற்கும் விசாரித்துக்கொண்டு செல்லலாம் என்ற விடுதி மேலாளரை விசாரித்ததில், நதியில் நீர்ப்பெருக்கு அதிகமாகி முன்தினம் ஓரிருவர் அடித்துச் செல்லப்பட்டதால் நதியில் நீராட தடைவிதித்திருப்பதாகக் கூறினார்.  


எனவே அறையிலேயே குளித்து கோவிலுக்குச் சென்றோம்.  அன்று விடுமுறை (காந்தி ஜயந்தி) தினமாதலால் ஏற்கெனவே பக்தர்கள் குவிந்திருந்தனர்.  200 ரூபாய் கட்டண தரிசனத்திற்கே அரை மணிநேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. தரிசனம் முடிந்து அறைக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் எப்போது வர முடியுமோ என்ற எண்ணத்தில இன்னுமொருமுறை தரிசனம் செய்தால் என்ன என்றெண்ணி மீண்டும் கோவிலுக்குச் சென்றோம்.  காலையில் கண்டதைவிட பலமடங்கு கூட்டம் அதிகமாகியிருந்தது. விசாரித்ததில் ஸஹஸ்ரநாம சேவை வரிசையில் சென்றால் சுமார் ஒரு மணிநேரத்திற்குள் தரிசனம் கிடைக்கலாம் என்று தெரியவே, 300 ரூபாய் கொடுத்து அந்த சேவையில் சேர்ந்து கொண்டோம்.


   


பகவான் தரிசனம், அதுவும் பத்ராசல ராமர் தரிசனம் அவ்வளவு எளிதா என்ன? எங்களை சோதிப்பது போலவே அன்று பார்த்து உயர்நீதிமன்ற நீதியரசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் என முக்கியப் பிரமுகர்கள் வரவே, ராமதாசரைப் போலவே பக்தர்கள் அனைவரையும் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கூண்டில் அடைத்துவிட்டனர் கோவில் நிர்வாகிகள்.  மேளதாளத்துடன் அவர்களுக்கு கிடைத்த மரியாதையையும் விரைவு தரிசனத்தையும் பொறாமையுடன் பார்த்தவாறே நெரிசலில் நின்றோம் நாங்கள். என்னதான் நிற்கும் நேரத்தில் தெரிந்த ஸ்லோகங்களையெல்லாம் பாராயணம் செய்தாலும் பொறுமையிழந்த பொதுமக்களின் கூச்சலும் ஆரவாரமும் கவனத்தை கலைத்தன.


ஒரு வழியாக வி.ஐ.பிக்கள் நகர்ந்தபின்னர் காத்திருந்தது வீணாகாமல் முத்தங்கியில் மிக நல்ல தரிசனம் தந்தார் சீதையை மடியிலும் லக்ஷ்மணரை அருகிலும் கொண்டிருந்த ராமர்.  மலை மேல் அமைந்த பழைய கால சிறிய கோவில் காலத்திற்கேற்ப மாறுதல்களுக்கு ஆளாகியிருந்ததால் ஒரு நல்ல புகைப்படம் எடுக்க வசதியான இடமே இல்லை.  கிடைத்த இடத்தில் வந்ததற்கு அடையாளமாக ஒன்றிரண்டு படங்கள் எடுத்துகொண்டு ராமரை நமஸ்கரித்துக்கொண்டு புறப்பட்டோம்.


கோவிலிலேயே மணி பத்து-பத்தரை ஆகிவிட்டதால் சிற்றுண்டி இல்லாமல் நேராக மதிய உணவே வடை பாயசம் இனிப்புடன் விருந்தாக அளிக்கப்பட்டது.  அங்கிருந்து கோதாவரி நதிக்கரையில் அமைந்த பர்ணசாலைக்குச் சென்றோம்.


இங்கு இருந்த ஆசிரமத்தில் இருந்துதான் காவலுக்கு இருந்த லக்ஷ்மணரை மாயமான் மூலமாக திசை திருப்பி சீதாதேவியை இராவணன் கடத்திச் சென்றான். இங்குள்ள கோவிலில் தாயார் சீதையின் பாதச்சுவடுகள் இருப்பதாக அறிந்தோம். ஆனால் நாங்கள் சென்றபோதே கோவில் மூடிவிட்டதால், மாலை மீண்டும் திறக்கும் வரை காக்க எங்களுக்கு நேரமில்லாததல் பர்ணசாலையில் இராமாயணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளை மட்டும் கண்டு திரும்பினோம்.


 


இதுவரை கண்ட கோவில்கள் போல் இல்லாமல் இந்த பர்ணசாலை மட்டும் பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக வரும் கண்காட்சி போல் இருக்கிறது. இங்கு எனக்கு நம் பழமொழிகளில் இரண்டை நினைவுபடுத்தும் காட்சிகள் கிடைத்தன. வழியெங்கும் பெண்கள் குவியல் குவியலாக அடர்ந்த பழுப்பு நிறத்தில் அவல் போல கொட்டிவைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.  விசாரித்ததில், அது இலுப்பைப்பூ என அறிந்து கொண்டோம்.  அசட்டு தித்திப்புடன் இருந்தது.  ஆலையில்லா ஊருக்கு இலுப்பைபூதான் சர்க்கரை என்பது ஏன் என்று தெரிந்துகொண்டேன்.


இங்கும் கோதாவரி அகண்ட பிரவாகமாக ஓடிக்கொண்டிருக்கிறாள்.  சிறிது ப்ரோக்ஷணம் செய்து கொள்ளலாம் என்று கரையருகில் செல்ல முயன்றால் தரையில் ஏற்கெனவே பதிந்திருந்த கால் சுவடுகள் அது ஸ்திரமில்லாத புதை மணல் போல இருப்பதை உணர்த்தியது.  இருந்தும் என்னுடன் வந்த நண்பர் சோதித்துப் பார்க்கலாம் என்று காலை வைத்தால் நேராக முழங்கால் முட்டி அளவுக்கு கால் உள்ளே சென்றுவிட்டது!  விழாமல் சமாளிப்பதற்காக அடுத்த காலை வைக்க வேண்டியிருந்ததால் அதுவும் அப்படியே சென்று விட்டது.  நல்ல வேளையாக அவர் சேற்றில் விழவில்லை.  ஒரு வழியாக சமாளித்து சற்று காய்ந்திருந்த இடத்தில் காலை வைத்து மேலே ஏறி படகுத்துறைக்குச் சென்று கால்களை கழுவிக்கொண்டு வந்தார். ஆழம் தெரியாமல் காலை விடாதே என்று கோதாவரிக்கரை நினைவுபடுத்தியது.


 


இவ்வாறாக பானகத்தில் தொடங்கி இலுப்பைபூ வரை எங்கும் அலுப்பு தெரியாமல்  மிதமான இனிப்பில் தொடர்ந்த பயணம் இரவு ஏழரை மணிக்கு விஜயவாடா இரயில் நிலையம் வந்து சேர்ந்தவுடன் இனிதே முடிந்தது.  வழியில் பேருந்திலேயே இரவு உணவும் கையில் கொடுக்கப்பட்டுவிட்டதால் ஒரு கவலையும் இன்றி ரயிலேறி மறுநாள் காலை பத்திரமாக வந்து சேர்ந்தோம்.


எந்த இடத்திலும் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்ட அமிர்தம் திவ்யதேசக் குழுவினரான திருவாளர்கள் அஷோக், நாராயணன், நிர்மல், சாரதி ஆகியோருக்கும் இவர்களுக்கு பக்கபலமாக துணை நின்று சமையல், சாமான், உட்பட அனைத்து விஷயங்களிலும் உதவி செய்தவர்களுக்கும், பத்திரமாக அழைத்துச்சென்று திரும்பிக் கொண்டுவந்து சேர்த்த ஓட்டுநர்களுக்கும் நம் கோடானுகோடி நன்றிகள் உரித்தாகட்டும்.  ஸ்ரீமந்நாராயணன் இவர்களோடு சேர்த்து நம்மையும் எந்தக் குறையுமில்லாமல் காத்தருள வேண்டுவோம்.


நன்றி, வணக்கம்.


அன்புடன்,


ரகுநாதன்.



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home