Thursday, August 13, 2020

காக்கா முட்டை

 

ஐந்து ஆறு ட்ரிப் அடித்தாகிவிட்டது காலையிலிருந்து. முந்தின நாள் அலைச்சலிலிருந்து ஞாபகம் வைத்துக்கொண்டு சரியான இடங்களுக்குப் போய் பார்த்த பொருட்கள் அதே இடத்தில் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொண்டு ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு வந்து சேர்த்ததிலேயே களைப்பாக இருந்தது. சற்று ஓய்வெடுக்கலாம் என்று நிழலில் அமர்ந்தான் அவன்.


என்னா ஒக்காந்துட்டே…? சும்மா நாலு சுத்து சுத்திட்டு கொஞ்சம் சாமான் கொணாந்து போட்டா போறுமா? எத்தினி வேல இருக்கு இன்னும்..? என்று படபடத்தாள் அவன் மனைவி.


சும்மா கரையாதேம்மே...நா என்னா சும்மாவா ஒக்காந்திருக்கேன்? இந்த கொரோனா வந்தாலும் வந்திச்சு எங்கியுமே எந்த வேலயும் நடக்கல….சாப்பாடும் கெடைக்கல…. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா கட்டமெல்லாம் திருப்பி கட்ட ஆரம்பிச்சிருக்காங்க… அங்கங்க மரம் வெட்டி, மணல் கொட்டி, கம்பி கட்டி….. இப்பத்தானே தொழிலே தொடங்கியிருக்கு? ஒன் அவசரத்துக்கு சாமான் எல்லாம் கிடைக்குமா? கொஞ்சம் பொறுமாயாய்த்தான் இருக்கணும்…. சும்மா கூவிக்கினே இருந்தா வேல நடந்துருமா என்னா? என்று பதிலுக்கு அங்கலாய்த்தான் அவன்.


நீ என்னய்யா, ஆம்பள...ஒனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்ல…. நான் பொஞ்ஜாதிதானே எல்லாத்தையும் சுமக்கணும்...சரி நான் போய் நீ கொணந்ததுலே எது தேறும் எது தேறாதுன்னு பாத்து வெக்கிறேன்… நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திக்கினு அப்புறம் எனக்கு இன்னும் என்னான்னா வேணுமோ கொஞ்சம் சீக்கிரம் பாத்து கொணந்திடுய்யா… என்று சற்று இறங்கி வந்தாள் அவள்.


பொறு…. செஞ்சிக்கிட்டேதானே இருக்கேன்? அப்படி என்னாடி அவசரம் ஒனக்கு?


இல்லய்யா..எப்படியும் இன்னும் ரெண்டு நாளைக்கு மேல தாங்காதுய்யா… அதுக்குள்ள வீட்ட முடிச்சிடனும்….சொல்லிட்டேன் … ஆமா….


எப்பிடிடீ முடியும்… நானும் எவ்ளோ அலயறேன்… நேத்தி பாத்துவெச்ச சாமான் காலைல போய் பாத்தா அதுக்குள்ள வேற யாரோ எடுத்துட்டிருக்காங்க….அதென்னா ரெண்டு நாள்….கொஞ்சம் பொறுமையா நாலு நாள்ளதான் ரெடி பண்ணலாமே?


அதெல்லாம் ஒனக்குப் புரியாதுய்யா….சரி நான் ஒன்ன ரொம்ப புடுங்கல… ஆனாகூட இருக்கிற சாமான் சுத்தமா போறாது…


அப்போ நா என்னதான் செய்யணுங்கறே?


ஒனக்கு அலயறது கஷ்டமாயிருக்குன்னு தெரியுது… நீ கஷ்டப்படுறியே தவிர புத்தியில்லெ உனக்கு… நான் சொன்னா கோவம் மாத்திரம் வரும்…


அப்படி என்னாடீ நான் புத்தியில்லாமே பண்ணிட்டேன்?


நீயே பாரேன்… நானும் நேத்தி காலைலிருந்து கஷ்டப்பட்டுட்டிருக்கேன்… நீ கொணந்த சாமான் ஒண்ணாவது தோதாயிருக்கா பாரு? எனக்கு எப்படி வேணும்முன்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா ஒனக்கு?


யம்மா...ஒன்னோட பேசி மாளாது எனக்கு…. நீ சரியாச் சொல்லு… நான் போய் எங்கேருந்தாலும் தூக்கிக்கிணு வந்துர்ரேன்… அப்பறம் இது சரியில்லே அது சரியில்லேன்னு சொல்லாதே….


ஆமா… நா சொன்னா அப்பிடியே சொன்னாமாரி கொணந்திருவே நீ! ஒனக்கு அவ்ளோ சாமார்த்தியம் இருந்திருந்தா இந்நேரம் நா பங்களாவே கட்டியிருப்பேன்..


அப்பா என்னை என்னாதாண்டி பண்ணச் சொல்றே?


நீ ஒண்ணியும் பண்ண வேணாம்….கொஞ்ச நேரம் பத்திரமா பாத்துக்கோ….நான் ஒரு நடை போய் பாத்துட்டு வந்து என்னா வேணும் எப்படி வேணும்முன்னு சொல்றேன்… அத மாத்திரம் கரெக்டா கொணந்திருவியாம் நல்ல பிள்ளயாட்டம்… என்று சொல்லி அவள் புறப்பட்டாள்.


இந்தப் பொம்பளைங்களோடவே ரோதனைதான்…. என்று நொந்துகொண்டே காவல் காக்க அமர்ந்தான் அவன்.


இரண்டு மூன்று மணி நேரம் ஆகியும் அவள் திரும்பவில்லை.. அவனுக்குக் கவலையாயிற்று… உட்டகார முடியவில்லை. அவன் தேடப் போனாலோ அந்த சமயம் அவள் திரும்பி வந்து தான் காவலுக்கு இல்லை என்பதைக் கண்டால் அவன் கதி அதோகதிதான்...என்ன செய்வது என்று புரியாமல் அங்கேயும் இங்கேயும் பார்த்துக்கொண்டே அருகிலேயே நடந்துகொண்டிருந்தான்.


அப்பாடா...சற்று நேரத்தில் அவள் திரும்பினாள். கொஞ்கம் நிம்மதி...கொஞ்சம் கோபத்துடன் என்னாடீ இவ்ளோ நேரம்? நா காத்துக்கெடக்கேனேன்னு தோணலியா ஒனக்கு? என்று ஆரம்பித்தான்.


ஆங்? நிறுத்து ஒன் பொலம்பல...ஒனக்கு ஒத்தாசை செய்யனுமேன்னு பொம்பள நான் கஷ்டப்பட்டு சுத்திட்டு வந்திருக்கேன்…. என்ன வையறியா நீ….கொத்திடுவேன்… ஜாக்கிரதை… என்ற மிரட்டிவிட்டுத் தொடர்ந்தாள்..


இங்க பாரு...சரியா கேட்டுக்கோ….இம்மா நேரம் சும்மா சுத்தல நானு...கரெக்டா வெவரமா பாத்துக்கினு வந்திருக்கேன்….சால்ஜாப்பு எதுவும் சொல்லாம இப்ப போனாலுஞ்சரி, வெள்ளன போனாலுஞ்சரி, நான் சொல்ற எடத்தில இருக்கிற சாமான மாத்திரம் நீ தூக்கிட்டு வந்திட்டேன்னா போதும்…


சரி சொல்லு...நீ மாத்திரம் எவ்வளவு கெட்டிக்காரின்னு பாக்கலாம்….


கெட்டியோ பொட்டியோ...நா சொன்னத செஞ்சா ஒனக்கு அலச்சல் மிச்சம் தெரிஞ்சிக்கோ…. ஜாஸ்தியானா நாலு இல்லாட்டி மூணே ட்ரிப்புல கொண்ந்திடலாம்….அரை நாளுக்கு மேல ஒனக்கு வேலை இல்ல…. மிச்சம் எல்லாம் நீ ஒத்தாசை செஞ்சா நாள இல்லாட்டி நாளன்னிக்கு மதியத்துக்குள்ள நான் முடிச்சிடுவேன்…


சரிடியம்மா...ஒன் ஆசைப்படியே ஆவட்டும்….எங்க போவனும் என்னா பண்ணனும்….சொல்லு…


சரியா கேட்டுக்கோ...அப்பறம் சுத்தவிட்டேன்னு சொல்லாதே...தெரியுதா? மொதல்ல தெருமுனை ஆலமரத்துக்கிட்ட போ...அங்கே நேத்து நுங்கு வெட்டின இடத்துல நறுக்கிப்போட்ட பன ஓல கொஞ்சம் கிடக்கும்...அதுலேந்து நடுக்காம்போட இருக்கிற ஒல ஒரு நாலஞ்சி கொண்டுவா..


அப்புறம்…?


நம்ம அம்மன் கோயில் கொளம் இருக்கில்ல...அதோட படிக்கட்டுக்கு எதுது புது வீடு கட்டிக்கினு இருக்காங்க...இன்னிக்கு கம்பி கட்டிட்டிருந்தாங்க...வெட்டிப்போட்ட மிச்சம் மீதி கம்பி எவ்ளோ தூக்க முடியுமோ அவ்ளோவும் கொண்டா...


சரி….அப்பறம்…?


நம்ம பக்கத்து வீட்டு தென்ன மரம் புது குருத்து விட்டிட்டிருக்கு...அதுலேந்து எளசா பிச்சிக் கொண்டாரணும்...அதுவும் எவ்ளோ முடியுமா பாரு….முடியலன்னா மரம் பக்கத்தலதான இருக்கு...மீதி நான் பாத்துக்கறேன்…


அவ்ளோதானா? இன்னும் ஏதாச்சும் இருக்கா…


இத மொதல்ல முடி….அப்புறம் சொல்றேன்..


இவ்வளவு கண்டிஷனோடு முடியுமா? முடிந்தது. அவள் கெட்டிக்காரிதான். சரியாக நோட்டம் பார்த்துவிட்டுத்தான் சொல்லியிருக்கிறாள். அவள் சொன்ன மாதிரி அடுத்தநாள் மதியத்திற்குள்ளாகவே வேலை முடிந்துவிட்டது. கொண்டு வந்ததையெல்லாம் ஓரிடத்தில் கொட்டியிருந்தான். அவளும் அதைப் பார்த்துவிட்டு, பரவால்லியே, சரியாத்தான் கொணந்திருக்கே...என்று பாராட்டவும் செய்தாள்.


அவள் சொல்லித்தான் செய்தாலும், சரியாகச் செய்திருக்கிறோம் என்ற பெருமையுடன் அவளருகே ஆசையாக நெருங்கி, சரி, இப்போ சொல்லு...என்னா சமாச்சாரம், ஏன் இந்த அவசரம்? என்ற கேட்டான்.


அவள் வெட்கத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு, எல்லாம் நாளைக்கு காலைல உனக்கே தெரியும்… இப்ப நான் சொல்றதையெல்லாம் செய்...அதுக்கு முன்னாடி அங்கே சாப்பாடு எடுத்து வெச்சிருக்கேன் பாரு...சாப்டுட்டு வா...என்று அன்புடன் சொல்லவே, சீக்கிரம் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வந்து அவள் ஆணைக்குக் காத்திருந்தான்.


மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. கொண்டுவந்த பொருட்களை கனகச்சிதமாக உபயோகித்து தன் புத்திசாலித்தனத்தை அவனுக்கு பிரகடனப் படுத்தினாள் பத்தினி.


ஆஹா! அற்புதம்! எங்கே எப்போ கத்துண்டே இத்தனை சமாச்சாரம்? என்ற அவளை மெச்சிக்கொண்டு அந்தி சாய்ந்தவுடன் அருகருகே அடைக்கலமானர் தம்பதியினர்.


காலை வெளிச்சம் பரவும் முன்னரே அவனை எழுப்பினாள். தலையே வேகமாக அப்படியும் இப்படியும் ஆட்டிக்கொண்டு, என்ன? என்ற கேட்டான் அவன். அவள் தன் பார்வையை உட்பக்கம் திருப்பினாள். அவள் பார்த்த திக்கை நோக்கி அவன் திரும்ப, அவளின் காலடியின் கீழ் ஒளிர்ந்தன நகைப்பேழையுள் போர்த்ப்பட்டிருந்த சிறு கிண்ணிகள் போன்ற மூன்று வெளிர்நீல முட்டைகள்!


அடிக்கள்ளி! இதைத்தானா என்னிடம் மறைத்தாய்? இதற்குத்தானா இத்தனை ஆட்டம் ஆடினாய்? நம் வாரிசுகளை பாதுகாக்கத்தான் வீடு கட்ட என்னை இந்த விரட்டு விரட்டினாய்? என்று ஆச்சரியமாகக் கேட்டபடி தானும் அவளும் சேர்த்துக் கட்டிய கூட்டை பெருமையுடன் நோட்டம் விட்டான் அவன், அந்த ஆண் காகம்.


இவைகளை பாதுகாத்து குஞ்சுகள் பொரித்து வளர்ந்து பறக்கும் வரையில் நீதான் என்னையும் இவைகளையும் உன் கண்ணைப்போல் காக்க வேண்டும் என்று உரிமையோடு கட்டளையிட்டு அவனருகில் நெருங்கி அமர்ந்தாள் அன்னைக் காகம்.

Tuesday, August 4, 2020

நகை


கோபாலன் மணியின் உற்ற நண்பன். வேறுவேறு வகுப்புகளில் படித்தாலும் ஒரே பள்ளி என்பதனாலும் இரண்டு தெரு மட்டுமே தள்ளி வசித்ததனாலும் ஒன்றாகவே பள்ளிக்குப் போவார்கள். ஒன்றாகவே விளையாடுவார்கள். மணியின் வீடு தாண்டிதான் விளையாட்டு மைதானம் என்பதால் கோபாலன் எப்போதும் மணி யின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து அவனுடன் விளையாடச் செல்வான். மற்ற நண்பர்களும் அதுபோலவே மணியின் வீட்டில் முதலில் ஆஜராகி பின்னர் அங்கிருந்தே மைதானத்துக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

மணியின் வீட்டில் உள்ள அத்தனை பேருக்கும் மணியின் நண்பர்களைத் தெரியும். அதுபோலவே நண்பர்கள் அனைவரும் மணியின் வீட்டில் உள்ளோருடன் நன்கு பழகுவார்கள். ஆனால் மணியின் வீட்டில் ஒன்று மாத்திரம் அவர்களுக்குப் புரியவில்லை. அவனுடைய வீட்டில் இரண்டு அம்மா. மணிக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி. இந்த நால்வரின் தாய் தங்கம். தங்கத்தின் அக்கா ஷண்பகத்தையும் அவர்கள் அம்மா என்றே அழைத்தனர். யாரைக்கேட்டாலும், ஆமாம், எங்களுக்கு தங்கம்மா, ஷண்பகம்மா என்ற இரண்டு அம்மாக்கள் என்றே கூறினர். ஷண்பகத்தை முதலில் மணந்த மணியின் தந்தை, அவளுக்கு வெகுநாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாததால் பின்னர் அவளுடைய தங்கையான தங்கத்தையும் மணந்தார், அவளுக்கு குழந்தைகள் பிறந்தவுடன் அக்காவும் தங்கையும் ஒரே கணவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதன் நெளிவு சுளிவுகள் எல்லாம் புரிபடாத சிறு வயதில் இருந்தே மணியின் நண்பர்கள் பழகி வந்ததால் இரண்டு அம்மாக்கள் என்பது வித்தியாசமாகத் தெரியாமல் எல்லாம் சுமுகமாகவே இருந்தது.

நாளடைவில் பள்ளிப்படிப்பு முடிந்து பாதைகள் மாறி வேலை வேறுவேறு ஊர்களில் என்றானபிறகு கோபாலனுக்கும் மணிக்குமான நேரடித் தொடர்பு சற்று குறையத் தொடங்கி, பின்னர் முற்றிலுமே நின்று போனது. எப்போதாவது சாலையில் நடந்து செல்லும்போதோ வண்டியில் போகும்போதோ பார்க்கும்போது எதிர்ப்பட்டால் ஓரிண்டு நிமிடம் நின்று பேசுவார்கள். போகப்போக அதுவும் குறைந்து கடக்கையில் வெறும் கையசைப்பதோடு சரி.

ஒரு நாள் கோபாலனின் தந்தை இறந்துபோனார். விசாரிக்க வந்த மணியுடன் உரையாடிக்கொண்டிருந்த கோபாலன், பேச்சு வாக்கில் அனைவரின் முன்னிலையிலேயே, மணி, உன்னுடைய அப்பா மற்றும் அம்மாக்கள் எப்படி இருக்கிறார்கள்? என்று கேட்டுவிட்டான். மணி முதலில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் கோபாலன் கேட்டவுடனேயே அருகில் இருந்தவர்களில் சிலர் சிரித்தது அவனை காயப்படுத்தியிருக்கவேண்டும். அவன் முகம் சற்று இறுகியது. சட்டென்று விசாரிப்பதை முடித்துக்கொண்டு அங்கிருந்து விலகிவிட்டான். துக்கம் விசாரிக்க வந்த இடத்திலிருந்து சொல்லாமல் கிளம்புவதுதான் வழக்கம் என்பதனால் கோபாலன் அப்போது அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அதற்கப்புறம் மணியைப் பார்க்கும்போதெல்லாம் அவன் கோபாலனைக் கண்டுகொள்ளாமலேயே சென்றான். ஆரம்பத்தில் வித்தியாகமாகத் தோன்றினாலும் நாளாக நாளாக வாழ்க்கையின் மற்ற அவசரங்களில் மூழ்கும்போது இது சகஜம்தான் என்ற முடிவுக்கு வந்திருந்தான் கோபாலன்.

ஒருநாள் கோபாலன் வாழ்வில் பூகம்பம் தாக்கியது. அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. மனைவியும் குழந்தைகளும் அவளுடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருந்தார்கள். தனியாக இருந்தவன் காலையில் வாசலில் உட்கார்ந்து தினசரி செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்கும்போது ஐந்தாறு பேர் கொண்ட ஒரு சிறு கூட்டம் அவன் வீட்டு வாசலில் நின்று மறைந்த அவன் தந்தையின் பெயரைச் சொல்லி விசாரித்தார்கள். இந்த வீடுதான், வாங்க என்று வெகுளியாக வரவேற்றான் கோபாலன். வந்தவர்கள், அதெல்லாம் இருக்கட்டும், நீங்கதான் அவர் மகனா? இதுதான் அவர் வீடா, எவ்வளவு ஏரியா? என்று அடுக்கடுக்காக விசாரிக்கவும், அந்தக் கூட்டத்தில் சிலர் பிரிந்து அவன் வீட்டைச் சுற்றிப்பார்க்கவும் செய்தனர்.

கோபாலனுக்கு கோபம் வந்தது. யார் நீங்க, என்ன அடாவடி பண்ணறீங்க, என்ன வேணும் சொல்லுங்க… என்று சற்று உரத்த குரலில் அதட்டினான். அந்த நேரம் பார்த்து வெளியில் சைக்கிளில் அவன் வீட்டைத் தாண்டிக்கொண்டிருந்த மணி சைக்கிளை நிறுத்தி என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதுபோல் உள்ளே நோட்டம் விட்டான்.

வந்தவர்களில் ஒருவன், நிதானமா பேசுங்க தம்பி, நாங்க சும்மா வரல்ல..அடாவடி பண்ணினது உங்க அப்பா… அதுக்கு நியாயம் கேட்டுத்தான் வந்திருக்கோம்… என்றான்.

என்னது? எங்கப்பாவா? அவர் செத்துப்போய் மூணு மாசம் ஆகுது தெரியுமா உங்களுக்கு? என்று மீண்டும் கோபத்துடன் கேட்டான் கோபாலன்.

தெரியும் தம்பி… அவருக்க நீதான் வாரிசுன்னும் தெரியும்… அதுதான் வந்திருக்கோம்… என்றான்.

என்ன சொல்றீங்க… எனக்கு ஒண்ணும் புரியல்லியே… என்றான் கோபாலன்.

தம்பிக்கு ஒண்ணும் தெரியாதாம் பாவம்… நீ சொல்லு ராஜூ என்று அவன் கூட்டத்திலிருந்த இன்னொருவனைத் தூண்டினான்.

பயப்படாதே தம்பி… இப்படி வா… உக்காரு என்று ராஜூ என்பவன் கோபாலனை கையை இழுத்து உட்காரச் சொன்னான். கையை உதறிய கோபாலன், இது என் வீடு...நீ என்னை உட்காரச் சொல்ல வேண்டாம்… வந்த விஷயத்தைச் சொல்லு என்றான்.

ராஜூ தன் சட்டைப்பையிலிருந்து நடு வயதைத் தாண்டிய பெண் ஒருத்தியின் புகைப்படத்தை எடுத்துக் காண்பித்தான். இது யாரு தெரியுதா உனக்கு? இது எப்பனாச்சும் இங்க வந்திருக்குதா? என்று கேட்டான்.

கோபாலனுக்கு அந்தப் பெண்ணையும் தெரியவில்லை.. ஒன்றும் புரியவும் இல்லை. இல்லையே. எனக்கு இவங்களைத் தெரியாது. யார் இவங்க என்ற அப்பாவியாய்க் கேட்டான்.

சொல்றோம்…. சொல்றோம்…. அதுக்குத்தானே வந்திருக்கோம்… டேய் சீனு..போய் கூட்டியாடா அதை… என்று முதலில் பேசியவனுக்கு ஆணையிட்டான் ராஜூ. சீனு என்பவன் போய் தெரு முனையில் நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணை அழைத்து வந்தான். கோபாலனைப் பார்த்தவுடனேயே அந்தப் பெண் அவன் கையைப் பிடித்துக்கொண்டு, அப்படியே அவுங்களப் போலவே இருக்கீங்க தம்பி… நீங்க தான் எனக்கு நியாயம் சொல்லணும்… என்று விசும்பத் தொடங்கினாள்.

பதறிப்போய்விட்டான் கோபாலன். சட்டென்று கையை உதறிக்கொண்டு, என்னம்மா இதெல்லாம்… என்ன நடக்குது இங்கே… இதுக்கும் எங்கப்பாவுக்கம் என்ன சம்மந்தம்? என்று அவசர அவசரமாக கேள்விகளைத் தொடுத்தான்.

சீனுதான் பதிலளித்தான். இவங்க யாருன்னா கேக்குறே? இவங்களும் உன்னோட அம்மாதான் தம்பி… புரியலே? உங்கப்பாவுக்கு இவங்களும் பொண்டாட்டிதான்...அவர் போய்ட்ட சமாச்சாரம்கூட எங்களுக்குப் போனவாரம் தான் கெடச்சது.. என்னடாது…. மூணுமாசமா வரலையேன்னு அழுதிட்டிருந்தது இது..இப்பதான்தெரியுது அவரு இனிமே வரமாட்டார்ன்னு...அதான் இவளை இங்க உன்னோட பாதுகாப்புல விட்டுட்டுப் போகலாம்ன்னு வந்திருக்கோம் என்றான்.

கோபாலனுக்கு வியர்த்தது. சீனு சொல்வது உண்மையா? என்ன ஆதாரம்? உண்மை என்றால் எப்படி நமக்குத் தெரியாமல் போயிற்று? பொய் என்றால் என்ன தைரியத்தில் இவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்? அவன் தலையில் ஆயிரம் கேள்விகள் சுற்றின. கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

சட்டென்று முதலில் வீட்டுக் கதவை மூடினான். மனைவி பிள்ளைகளுக்குத் இப்போது எதுவும் தெரிய வேண்டாம். பிறகுதான் நினைவுக்கு வந்தது அவர்கள் ஏற்கெனவே வீட்டில் இல்லை, நாளை காலைதான் வருவார்கள் என்று. முதலில் இவர்களை எப்படியாவது சமாளிக்க வேண்டும்… என்று நினைத்துக்கொண்டு.. இதப் பாருங்க… இதெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது.. எங்கப்பா அப்படிப்பட்ட மனுஷனும் கிடையாது… நீங்க சொல்றதுக்கொல்லாம் என்ன ஆதாரம்? சாட்சி? இப்படியெல்லாம் மெரட்டினீங்கன்னா நான் என்னோட ஆளுங்களையும் போலீசையும் கூப்பிட வேண்டியிருக்கும்… என்று பதிலுக்கு மிரட்டினான்.

தெரியும் தம்பி… நீங்க இப்படிப் பேசுவீங்கன்னு தெரியும்… அதனாலதான் எல்லா ஆதாரங்களையும் கொண்டு வந்திருக்கோம் பாருங்க…. என்ற ஒரு பழைய பையிலிருந்து சில காகிதங்களையும் போட்டோக்களையும் எடுக்க ஆரம்பித்தான் சீனு. போட்டோக்களைப் பார்த்த கோபாலன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான். அது அவனது அப்பாவேதான்! எப்படி அவருக்கு இன்னொரு குடும்பம் இருப்பதை முற்றிலுமாக மறைத்தார்? எப்போதிலிருந்து இது? எப்போதெல்லாம் அங்கு இருந்தார்? மீண்டும் கண்ணில் தட்டாமாலை சுற்றியது.

சுதாரித்துக்கொண்டு, இத பாருங்க சார், இது என்னோட பொண்டாட்டி கொழந்தைகளுக்குத் தெரிய வேண்டாம்… மொதல்ல கொஞ்சம் வெளியில அந்தப் பக்கமா போய்ப் பேசலாம் வாங்க… என்று அவர்களை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

அதுவரை அங்கு நின்றிருந்த மணி இவர்கள் வெளியில் வருவதைப் பார்த்ததும் சட்டென்று சைக்கிளை நிமிர்த்தி அங்கிருந்து விலகினான். கிளம்பும்போது கோபாலனை புன்னகையுடன் ஓரமாக ஒரு பார்வை பார்த்துச் சென்றான். கோபாலனுக்கு மனதில் ஏதோ உறுத்தியது.

வந்தவர்களை சாலையின் முடிவில் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தி, பிரச்சினையை அலச அவகாசம் கேட்டான் கோபாலன். இத பாருங்க, நீங்க சொல்றது எனக்கு தலைல இடி விழுந்தா மாதிரி இருக்கு. என்னால எதுவும் சட்டுன்னு முடிவெடுக்க முடியாது. அதுவுமில்லாம, நீங்க சொத்து, பணம் ஏதாவது எதிர்ப்பார்த்தீங்கன்னா அதையும் மறந்திடுங்க. நாங்க இருக்கிறதோ வாடகை வீடு, அம்மாவுக்கு ஒடம்புக்கு வந்ததுலேர்ந்து ஏகப்பட்ட கடன்ல இருக்கோம். அதனால, இப்போ எதுவும் பண்ண முடியாது. நான் கொஞ்சம் யோசனை பண்ணித்தான் இதுக்கு முடிவு எடுக்கணும். உங்க முகவரி கொடுத்துட்டுப்போங்க… நானே வந்து என்ன பண்ணறதுன்னு சொல்றேன்.. நான் எங்கேயும் ஓடிப்போயிட மாட்டேன்… என்னை நம்புங்க… என்று ஒருவாறு சமாளித்து சமாதானப்படுத்தி அவர்களை நம்பவும் வைத்து அனுப்பிவைத்தான்.

அதன் பிறகு அவன் வெளியில் போகும்போதெல்லாம் எப்போதாவது எதிர்ப்படும் மணி, அவனைப் பார்த்து ஒரு புன்னகை மாத்திரம் வீசிவிட்டு செல்வதுபோல் தோன்றியது. அதுமட்டுமல்ல, அந்த விசித்திரமான, குரூரமான, ஏளனப் புன்னகையில் ஓர் அர்த்தமும் இருப்பதுபோல் பட்டது கோபாலனுக்கு.





முடக்கம்


இந்த வயதானவர்களுக்கு ஏன்தான் விடியற்காலையில் எழுந்திருக்கும் பழக்கம் வந்ததோ தெரியவில்லை. முந்தின நாள் என்னதான் அலைச்சலோ கடினமான வேலைகளோ இருந்தபோதிலும், எவ்வளவு நேரம் கழித்தே தூங்கப்போனாலும், அலாரம் அடிப்பதற்கு ஐந்து நிமிடங்கள் முன்னே தானாக விழிப்பு வந்துவிடுகிறது.

அதிலும் இந்த நான்கு மாதங்களாக அதிக வேலை, அலைச்சல் வேறு. ஐதராபாத் மற்றும் மும்பாயிலிருந்து வந்த அவரது இரு மகன்களும் மருமகள்களும் குழந்தைகளுமாக வீடு நிரம்பியிருந்தது. மார்ச் மாதம் இறுதியில் ஒரு குடும்ப விசேஷத்திற்காக வந்தவர்கள் திடீரென்று அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் இங்கேயே தங்கவேண்டி வந்துவிட்டது.

அவர்களைப் பொறுத்தவரையில் இது எதிர்பாராத போனஸ் என்றே கருதினார்கள். வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் அவரவர்கள் வேலைபார்த்த நிறுவனங்களும் சரி, குழந்தைகள் படித்துக்கொண்டிருந்த பள்ளிகளும் சரி, ஆன்லைன் தொடர்பு மூலம் அவரவர்களிடமிருந்து பெறவேண்டிய பங்களிப்பை நேரம் தவறாமல் பெற்றுக்கொண்டுதான் இருந்தன.

இதனால் வீட்டின் அனைத்து அறைகளும் நீண்ட நாட்களுக்குப்பின் முழு உபயோகத்திற்கு வந்தது மட்டுமின்றி, வைஃபை, ஏசி போன்ற நவீனகால அத்தியாவசியங்களின் அவசியம் மிகவும் அதிகமாகிவிட்டது. பெரியவர்களும் சரி, குழந்தைகளும் சரி, எப்போது பார்த்தாலும் தங்கள் கணினிகளுடனோ, மொபைல் ஃபோன்களுடனோதான் சஞ்சரித்துக்கொண்டிருந்தனர். கூப்பிட்டால் பதில் கொடுப்பதுகூடக் கிடையாது.

ஏழு வருட ஓய்வில் எல்லாவற்றிலும் சற்று நிதானமாகவும் சிக்கனமாகவுமே வாழப் பழக்கப்பட்டுவிட்ட அவருக்கு இந்த ஆடம்பர, பரபர வாழ்க்கை மிகவும் சிரமமாக இருந்தது. கம்ப்யூட்டர் கில்லாடிகளான மகன்களும், மருமகள்களும் பேரக்குழந்தைகளும் என்னதான் ஆன்லைனில் தத்தம் விருப்பத்திற்கேற்ப பொருட்களை வாங்கிவாங்கி அடுக்கி வைத்தாலும், நாள்தோறும் மாறுபடும் தினசரித் தேவைகளும் கடல் அலை போல் ஓயாமல் வந்துகொண்டேதான் இருந்தன.

ஆரம்பத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரத்திற்குள் காலை ஒருமுறையும் தேவைப்பட்டால் மாலை மற்றொருமுறையும் போய் வரிசையில் நின்றோ அமர்ந்தோ பொருட்களை வாங்கி வருவதில் சற்று பொழுதும் போனாற்போல் தோன்றினாலும் வரவர நேரம் காலம் மாறி சமயங்களில் நண்பகல்வரை தாமதமாகும்போது அவருக்கும் வெய்யிலில் சென்று வருவது சற்று சிரமாகவே இருந்தது.

அவராவது பரவாயில்லை. அவரது மனைவிக்குத்தான் பாவம் இத்தனை பேருக்கும் சேர்த்து சமைப்பது ஒரு சவாலாகவே மாறிவிட்டது. மருமகள்கள் அவ்வப்போது உதவிசெய்தாலும், வேலை வேலைதானே! உதவிக்கு வந்தார்களேயன்றி சமைப்பதற்கு இறங்கவில்லை. அம்மா, உங்கள் கை ருசியே ருசி! உங்கள் கைமணம் போல் எங்கும் கிடைக்காதம்மா! எப்படியம்மா கற்றுக்கொண்டீர்கள் இத்தனை சமையலும்! என்று அவளை வாயாரப் புகழந்தே மயக்கத்தில் தள்ளிவிட்டு ஒதுங்கிவிடுவார்கள். போகட்டும் போ… இன்னும் எத்தனை நாளைக்கு இதுகள் இங்கேயே இருக்கப்போகிறதுகள்… நாம் நன்றாக இருக்கிறவரைக்கும் செய்துவிடுவோம்… முடியவில்லை என்றால் இவர்கள்தானே செய்ய வேண்டும்? அப்போது ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று மனதைத் தானே தேற்றிக்கொண்டு சிரமம் பார்க்காமல் அடுத்த நாளைக்கு புதிதாக அவர்களுக்கு பிடித்தமாதிரி என்ன செய்யலாம் என்று திட்டமிடத் தொடங்கிவிடுவாள்.

மதிய உணவுக்குப் பிற்பட்ட நேரத்தில் கணவன் அருகில் சற்று நேரம் படுத்திருக்கும்போது அவரை கை, கால் பிடித்துவிடும்படி கேட்க ஆசையாக இருந்தாலும். குழந்தைகளோ மற்ற யாராவதோ அருகில் இருந்தால் அதையும் கேட்காமலே இருந்துவிடவும் நேர்ந்தது.

இப்படித்தான் ஒருநாள் காலை. மனைவி அவரை எழுப்பினாள். இதோ பாருங்க.. இன்னிக்கு என்னமோ எல்லாருக்கும் முக்கியமான ஆன்லைன் மீட்டிங் இருக்காம்.. நேத்து ராத்திரியே சொல்லிட்டாங்க… கொழந்தைங்களைக்கூட நம்ம தான் பாத்துக்கணுமாம்… நீங்க கொஞ்சம் சட்டுணு போயி எக்ஸ்ட்ராவா மூணு பாக்கெட் பாலும், ஒரு பாக்கெட் தயிரும் கொஞ்சம் தக்காளி வெங்காயமும் மாத்திரம் வாங்கிண்டு வந்திடுங்க… அவங்க கம்ப்யூட்டர்ல வாங்கற காய்கறி கொஞ்சம்கூட நல்லா இல்ல… இதை வெச்சிண்டு இன்னிக்கு நான் சமாளிச்சிடுவேன்… நாளைக்குப்பாடு அப்புறம் மத்தியானம் மேலே பாத்துக்கலாம்… என்றாள்.

மனைவியை ஏற இறங்கப் பார்த்தபடி, சரி...இதுங்கள்லாம் கொஞ்சம் சீக்கிரம் எழுந்தா இவங்களே ஒரு வாக்கிங் போறாமாதிரி போய் பக்கத்தில இருக்கிற மார்க்கெட்லேந்து ஃப்ரெஷ்ஷா இவங்களுக்குப் பிடிச்சாமாதிரி வாங்கிண்டு வரலாம்..நாம் சொன்னா எங்கே கேக்கிறதுங்க…. என்று அங்கலாய்த்துக்கொண்டே சட்டையை மாட்டிக்கொண்டு புறப்பட்டார்.

சும்மா கம்ப்ளைன் பண்ணாதீங்க… அவங்க ராத்திரி ஒரு மணி ரெண்டு மணி வரைக்கும் முழிச்சிண்டு இருக்காங்க தெரியுமா? அதுக்கப்புறம் தான் பாவம் தூங்கறாங்க… எப்படி சீக்கிரம் எழுந்துக்கிறது? என்று அவரது மனைவி இளசுகளின் பக்கம் பேசினாள்.

அதுதாண்டி நானும் சொல்றேன்… எதுக்கு ரெண்டு மணி வரைக்கும் முழிக்கணும், அப்புறம் ஒம்பது பத்து வரைக்கும் தூங்கிட்டு திரும்பி குளிக்கக்கூட பண்ணாம கம்ப்யூட்டர் முன்னாடியே கதியாக் கெடக்கணும்? கொஞ்சம் பிளான் பண்ணி வாழ்ந்தா இதெல்லாம் அவாய்ட் பண்ணலாமில்ல?

சரி.சரி… நான் ஒண்ணும் அவங்களுக்கு வக்காலத்து வாங்கலே.. நீங்க வேணா ஒங்க ஃப்ரெண்டுகளை எல்லாம் கேட்டுப் பாருங்க…. இந்தக் காலத்துப் பசங்க எல்லாம் இப்படித்தான் இருக்காங்க… அவங்களை மாத்தனும் சொல்றதவிட நாம் அட்ஜஸ்ட் பண்ணிண்டு போறதுதான் புத்திசாலித்தனம்...தெரிஞ்சுக்கோங்கோ…

அம்பது வருஷம் ஒன்னோட அட்ஜஸ்ட் பண்ணியாச்சு… இப்போ இன்னும் முப்பது வருஷம் இவங்களோட அட்ஜஸ்ட் பண்ணணுங்கிறியா? சரிதான்…. என்று சொல்லிக்கொண்டே வெளியில் சென்றார்.

அரை மணிநேரத்தில் திரும்பிவந்தார். இந்தா, நீ சொன்னதெல்லாம் சரியா வாங்கி வந்திருக்கேனா பாத்துக்கோ...இல்லைன்னாகூட இதுக்குள்ளே அட்ஜஸ்ட் பண்ணிக்கோ… நீதான் அட்ஜஸ்ட் பண்றதிலே கெட்டிக்காரியாச்சே….

க்கும்… இந்த பேச்சுல ஒண்ணும் கொறச்சல் இல்ல….உங்களோட குணத்துக்கு நான் அட்ஜஸ்ட் பண்ணியிருக்கல்லைன்னா நம்ம குடும்பமே இப்படி வளர்ந்திருக்காது தெரிஞ்சுக்கோங்க… அட்ஜஸ்ட்டாம் அட்ஜஸ்ட்டு….

கோவிச்சுக்காதேடீ….. நான் ஒண்ணும் தப்பா சொல்லலியே...நீ நல்லா அட்ஜஸ்ட் பண்ணி சமாளிக்கறேன்னுதான் சொன்னேன்...இப்ப பாரு...வெளியில போய் நின்னு வாங்கி வந்ததுல கொஞ்சம் டயர்டா இருக்கு… அட்ஜஸ்ட் பண்ணி ஒரு கப் காப்பி தர முடியுமா? .. என்று அவர் கேட்டவுடனே அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

கொஞ்சம் உக்காந்து பேப்பர் படிச்சிண்டிருங்க… இதோ புது டிகாக்ஷன் போட்டுத் தறேன்… என்று சொல்லி உள்ளே சென்றாள். அவர் செய்தித்தாளை விரித்தார். ஆனால் மனம் செய்தியில் இறங்கவில்லை.. சென்று வந்த ஆயாசமும் இளங்காலைக் குளிர்காற்றும் அவரை மெல்லத் தூக்கத்தில் ஆழ்த்தின.

பக்கத்தில் யாரோ உட்காரும் சத்தம் கேட்டு விழித்தார். மூத்த மகன் ராஜேஷ். என்னப்பா, பேப்பர் படிச்சிட்டே தூங்கிட்டீங்க? ஒடம்பு சரியில்லையா? நீங்க வேணா உள்ள போய் படுத்துக்குங்க..இன்னிக்க உங்க வேலையெல்லாம் நான் பாத்துக்கறேன்….என்றான்.

தான் காண்பது நிஜம்தானா? அல்லது கனவா? வியந்தார். உங்களுக்கெல்லாம் ஏதோ ஆன்லைன் மீட்டிங் இருக்குன்னு அம்மா சொன்னாளே? என்று கேட்டார். ஆமாம்ப்பா...ஆனா அது மத்தியானம் மூணு மணிக்கு மேலதான்… வித்யாவுக்கு மாத்திரம்தான் காலைல ஒரு இண்டர்வியூ… மத்தபடி எதுவும் இல்லை… என்ன என்ன பண்ணனும் சொல்லுங்க….நான் பண்ணிடறேன்…. என்றான்.

இந்த நான்கு மாதத்தில் அவன் இப்படிப் பேசுவது இதுதான் முதல் முறை. நீ சொன்னதே போறும்ப்பா… இன்னிக்கு வேணுங்கறதை நான் காலைலயே முடிச்சிட்டேன்.. மீதி ஏதாவது இருந்தா சாயங்காலம் பாதுதுக்கலாம்ன்னு அம்மா சொல்லிட்டா… நீ உன் வேலையைப் பாத்துக்கோ… எனக்கு ஒண்ணும் இல்ல…. என்றார்.

அதற்குள் மற்றோர் அறைக்கதவு திறந்து இளைய மகன் ஹரீஷ் வந்து சேர்ந்துகொண்டான். என்னடா ராஜேஷ். அதிசயமா அப்பாகூட பேசிட்டிருக்கே? ஏதாவது விசேஷமா இல்ல பிரச்சனையா? என்று கலாய்த்தான்.

அவருக்கு சிரிப்பு வந்தது. ஏம்ப்பா….ஏதாவது விசேஷம் இல்லை பிரச்சனைன்னா மாத்திரம்தான் என்கூட பேசுவீங்களா? மத்தபடி நான் தேவை இல்லையா உங்களுக்கு? என்றார்.

அப்படி இல்லப்பா...உங்க லைஃப்ஸ்டைல் வேற..எங்க லைஃப்ஸ்டைல் வேற...நீங்க சீக்கிரம் எழுந்து குளிச்சி பூஜை புனஸ்காரம் அப்படின்னு இருக்கிறவங்க...நாங்கள்ளாம் க்ளையண்ட் நேரத்திற்கு ஏத்தாப்போல எப்பவேணா வேலை செய்ய வேண்டியிருக்கிறதால நேரம் காலமே கிடையாது… எப்ப வேணா எழுந்துப்போம். எவ்வளவு நேரம் வேணுமானாலும் வேலை செய்வோம்… ஒரு நாள் பன்னெண்டு பதினஞ்சு மணி நேரம் வேலை செய்வோம் இன்னொருநாள் ரெண்டு மணி நேரம்கூட செய்ய மாட்டோம்...எப்போ வேணுமுன்னாலும் தூங்குவோம்… இதெல்லாம் உங்களுக்குப் பிடிக்காம இருக்கும்.. ஏன், புரியாமக்கூட இருக்கலாம்..அதனாலதான் நாங்க உங்க ஆக்டிவிட்டில குறுக்கே வர்றதில்லைப்பா...மத்தபடி உங்களுக்கு ஹெல்ப் பண்ணக்கூடாதுன்னெல்லாம் ஒண்ணும் இல்ல...என்றான்.

சேச்சே...நான் எப்போ நீங்க ஹெல்ப் பண்றதில்லைன்னு சொல்லியிருக்கேன்…. இன்னிக்கு ஏதோ கொஞ்சம் டயர்டா இருந்தது… கொஞ்சம் அம்மாகிட்ட புலம்பிட்டிருந்தேன்…. அவ்வளவுதான்…. இதோ அம்மா போடற காப்பியை குடிச்சா எல்லாம் சரியாயிடும்…. நீங்க போங்கோ….உங்க உங்க வேலையைப் பாத்துண்டு சந்தோஷமா இருங்கோ….. இப்படி சேந்தாப்பல இருக்கற பாத்தியதை திரும்ப எப்ப கிடைக்கும்னு தெரியாது….என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு, காப்பி வாசனை வந்த பக்கமாய் திரும்பினார்.

டொக்...என்று காப்பியை முன்னே வைத்தாள் அவர் மனைவி. அப்போலேந்து சித்த கைவேலையாயிருக்கேன்..காப்பி கலந்தாச்சு வந்து எடுத்துக்கோங்கோன்னு கத்திண்டிருக்கேன்...அதுக்குள்ள என்ன தூக்கம்? இன்னும் எவ்வளவு வேலை பாக்கியிருக்கு? இன்னிக்குப் பூரா குழந்தைகங்களை நாம தான் மேய்க்கணும்...அவங்களுக்கு டிபன் ரெடி பண்ணிண்டிருக்கேன்...காப்பி குடிச்சிட்டு நீங்க கொஞ்சம் டைனிங் டேபிள் ஒத்தாசைக்கு வாங்கோ…இவங்க எப்ப எழுந்திரிச்சி எப்ப மீட்டிங்ல உக்காருவாங்கன்னு தெரியாது…. என்று கட்டளையிட்டு நகர்ந்தாள் அவர் மனைவி.

அவர் திரும்பிப் பார்த்தார். அறைக் கதவுகள் மூடித்தான் இருந்தன.